ஆர்.கே. நகரில் 39,537 வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஜெயலலிதா! 1 லட்சம் வாக்குகளை பெற பலரும் போட்டி
ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது 96,269 வாக்குகள் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
சென்னை: கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது ஆர்.கே. நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா 96,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு 56,732 வாக்குகள் கிடைத்தது. 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
2015ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 1,60,432. அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 9,710. ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. சிபிஎம் வேட்பாளர் மகேந்திரன் மட்டுமே போட்டியிட்டார். எனவே ஓட்டுக்கள் அனைத்து மொத்தமாக ஜெயலலிதாவிற்கு கிடைத்தது.
2016 சட்டசபைத் தேர்தலின் போது திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவியது. எனவே வாக்குகள் அனைத்து பிரிந்ததே ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசம் குறைய காரணமாக அமைந்தது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தற்போது மீண்டும் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக பிளவு பட்டுள்ளது. டிடிவி தினகரன், மதுசூதனன், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் வாக்குகளை குறிவைத்து களமிறங்கியுள்ளனர். திமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா கடந்த தேர்தலில் பெற்ற ஒரு லட்சம் வாக்குகள் இந்த இடைத்தேர்தல் யாருக்கும் கிடைக்கப் போகிறதோ பார்க்கலாம்.