ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அண்ணன் மகள் தீபா !
ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் நேற்று மாலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.
சசிகலா, இளவரசி ஆகியோரின் உறவினர்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு பாதுகாப்பு அரணாக சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஜெயலலிதாவின் ஒரே ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தார்.
ஆனால் போயஸ் கார்டனில் நடந்த சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொள்ள அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது சசிகலாவுடன் தீபக் மட்டுமே இறுதி சடங்குகளை செய்தார். அப்போதும் தீபா அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பால், பூ முதலிய பொருட்களுடன் அத்தைக்கு அஞ்சலி செலுத்தினார்.