ஹய்யோ.. ஹய்யோ... சேகரு சேகரு...!
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது மனைவியை சந்திப்பதற்காக சுடிதார் போட்டுக் கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்றார். எல்லாவற்றையும் சரியாக செய்தவர், கடைசியில் ஆண்கள் போடும் செருப்பைப் போட்டுப் போனதால் குழந்தையைக் கடத்த வந்தவர் என்று கருதப்பட்டு தர்ம அடி வாங்கும் நிலை ஏற்பட்டது.
27 வயதான சேகரிந் மனைவி பெயர் இந்திரா. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார் சேகர். பின்னர் வேலையை விட்டு விட்டு ஊர் திரும்பினார். வேலை இல்லாத நிலையில் தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்த இந்திராவைப் பார்க்கப் போனார் சேகர். தன்னுடன் வருமாறும் கூப்பிட்டுள்ளார். ஆனால் உனக்கே வேலை இல்லை என் மகளை அனுப்பி என்ன புண்ணியம் என்று கேட்டு திட்டி அனுப்பி விட்டார் மாமியார்.
அதிருப்தி அடைந்த சேகர் மனைவியைப் பார்க்க முடியவில்லையே என்று வேதனை அடைந்தார். இந்த நிலையில் அவருக்குள் ஒரு நூதன ஐடியா உதித்தது. பெண்வேடம் போட்டு மாமியார் வீட்டுக்குள் புகுந்து மனைவியைச் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்தார். இதனால் மேக்கப் போட்டார். தலைக்கை ஜடை வைத்து பெண்ணாக மாறினார்.. சுடிதார் போட்டு எடுப்பான தோற்றத்துடன், ஜம்மென்று மாமியார் வீட்டுக்குச் சென்றார்.
திண்டிவனத்தில்தான் அவரது மாமியார் வீடு உள்ளது. அந்த வீட்டை நோக்கி நடை போட்ட சேகரை பலரும் உற்றுப் பார்த்தனர். சிலர் உஷாராகினர். உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.. ஏன் இந்தத் தர்ம அடி என்று கேட்கிறீர்களா.. எல்லாவற்றையும் சரியாக செய்த சேகர், கடைசியில் ஆண்கள் போடும் செருப்புடன் வந்ததே மக்கள் கொடுத்த அடிக்குக் காரணம். மேலும் இரு நாட்களுக்கு முன்புதான் அப்பகுதியில் ஒரு குழந்தை கடத்தப்பட்டது. இதனால் இவரை குழந்தைக் கடத்தல்காரர் என மக்கள் நினைத்து விட்டார்.
அடி தாங்க முடியால் தனது கதையைக் கூறி கதறியுள்ளார் சேகர். இதையடுத்து இந்திராவுக்குத் தகவல் போய் அவர் ஓடி வந்தார். அவர் வந்த பிறகுதான் மக்கள் அடிப்பதை விட்டனர். பின்னர் இருவரையும் போலீஸ் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். அங்கு வைத்து இந்திராவுக்கும், சேகருக்கும் போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.