ஜல்லிக்கட்டு.. மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும் - ஜெயந்தி நடராஜன்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க செயல்தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஜல்லிக்கட்டு குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறிய ஜெயந்தி நடராஜன், ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது அல்ல என்றார்.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அதற்காக மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாண்டு சட்டப் பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெயந்தி நடராஜன் வலியுறுத்தினார்.