சசிபெருமாள் போராட்டத்தில் நடந்தது என்ன?- சொல்கிறார் சக போராளி ஜெயசீலன்
குழித்துறை: கன்னியாகுமரியில் மறைந்த காந்தியவாதி சசிபெருமாளுடன் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரும் பாஜக பிரமுகருமான ஜெயசீலன் போராட்டத்தின்போது நடந்த பரபரப்பு சம்பவங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.
அதில், "மதுக்கடையை அகற்ற கோரி மது போதை ஒழிப்பு மக்கள் இயக்கம் சார்பில் இறுதிக்கட்ட போராட்டமாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காந்தியவாதி சசிபெருமாளும் நானும் கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் செல்போன் டவரில் காலை 8.30 மணிக்கு ஏறினோம். பாதி தூரம் ஏறியதும் களைப்பு காரணமாக நான் பாதியிலேயே டவரில் நின்றுவிட்டேன். ஆனால் சசிபெருமாள் செல்போன் டவரின் உச்சி வரை சென்றுவிட்டார்.
அவர் எனக்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில் இருந்ததால் என்னால் அவருடன் பேச முடியவில்லை. மேலும் வெயிலும் கடுமையாக இருந்ததால் எங்களுக்கு களைப்பு ஏற்பட்டது. போராட்டம் நடந்த இடத்திற்கு ஆர்.டி.ஓ., ஏ.எஸ்.பி. ஆகியோர் வந்தனர். ஆனால் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற உயர் அதிகாரிகள் வரவில்லை. மேலும் அதிகாரிகளும் உடனடியாக பேச்சுவார்தையில் ஈடுபடவில்லை. இதனால் 5 மணி நேரத்திற்கு மேல் வெயிலில் நாங்கள் அவதிப்பட்டதால் கீழே திரண்டிருந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அதிகாரிகள் தாமதமாக பேச்சு நடத்தி 7 நாட்களில் மதுக்கடையை அடைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனால் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கமுடியாத அளவுக்கு நாங்கள் சோர்வாக இருந்தோம். அதற்குள் தீ அணைப்பு வீரர்கள் மேலே ஏறிவந்தனர். முதலில் சசிபெருமாளை மீட்கும்படி நான் கூறியதால் என் அருகே ஒரு வீரர் நின்றுகொள்ள மற்றவர்கள் மேலே சென்றனர்.
தீ அணைப்பு வீரர்கள் சசிபெருமாளை சூழ்ந்துகொண்டு அவரை மீட்டதாலும் கடும் வெயில் காரணமாகவும் மேலே என்ன நடக்கிறது என்பதை என்னால் தெளிவாக பார்க்கமுடியவில்லை. அதற்குள் என்னை கீழே இறக்கினார்கள். அதன்பிறகு சசிபெருமாளை கீழே கொண்டு வந்தபோது அவரது வாய், மூக்கில் இருந்து ரத்தம் வந்து அவரது சட்டை ரத்த கரையுடன் காணப்பட்டது.
மேலும் அவரது கழுத்தில் கயிறும் இருந்தது. அவரை மீட்கும்போது முதலில் கயிறை அகற்றாதது ஏன்? சசிபெருமாள் மயங்கிய நிலையில் உள்ளதாக கூறி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சசிபெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தால் சசிபெருமாளை காப்பாற்றி இருக்க முடியும். எனவே சசிபெருமாள் மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.