ரெய்டு எதிரொலி.. சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் ஆஜர்!
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜெயா டிவியின் பொது மேலாளர் நடராஜன் இன்று ஆஜராகியுள்ளார்.
சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜெயா டிவியின் பொது மேலாளர் நடராஜன் இன்று ஆஜராகியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் நிறுவனங்களில் கடந்த 9 ஆம் தேதி முதல் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். ஜெயாடிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட நிறுவனங்களிலும் ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன. வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயா டிவி பொது மேலாளர் நடராஜன் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் ஜெயா டிவி வரவு, செலவு கணக்குகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திவாகரன், விவேக் மற்றும் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் நாளை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக நேற்று தனித்தனியாக நோட்டிஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.