காஞ்சி ஸ்ரீமடத்தை பணக்கார மடமாக மாற்றிய ஜெயேந்திரர்! #JayendraSaraswathi
Recommended Video
காஞ்சிபுரம்: ஒரு முறை மறைந்த பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காஞ்சி மடத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பின்போது வந்திருந்த செய்தியாளர்களிடம் பெரியவர் இப்படி கேட்டுக் கொண்டார்: "ஸ்ரீமடம் ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கறது... நீங்க எல்லாம் பாத்து இங்க இருக்கிற தபால் தலைகளை வாங்கிக்கணும். ஸ்ரீமடத்துக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்..."
90கள் வரை இப்படித்தான் இருந்தது சங்கர மடத்தின் நிதி நிலைமை. 1000 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது சங்கர மடம். இந்த மடத்துக்கு விசிட் அடிக்காத ஆட்சியாளர்களோ, பெரும் செல்வந்தர்களோ இல்லை எனும் அளவுக்கு செல்வாக்கு. ஆனால் மடத்தை பணம் கொழிக்கும் தலமாக சந்திரசேகரேந்திரர் மாற்றவில்லை.
ஆனால் 90களில் முற்றுமுழுதாக சங்கர மடம் ஜெயேந்திரர் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் நிலைமை தலைகீழ். செல்வாக்கு மிக்க மடம் மட்டுமல்ல, செல்வம் கொழிக்கும் மடமாகவும் மாறியது சங்கரமடம். தங்கம், வெள்ளி, புத்தம்புது கரன்சி என காணிக்கைகளுக்குக் குறைவில்லை. வெளியில் ஸ்ரீமடத்தின் சார்பில் சொத்துகள், நிறுவனங்கள் ஏராளமாகச் சேர்ந்தன.
1980ல் காஞ்சி மடத்துக்கு ஒரே ஒரு மருத்துவமனை - தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை- மட்டுமே இருந்தது. ஆனால் இன்று இந்த மடத்துக்குச் சொந்தமாக 44 மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ளன. சந்திரசேகரேந்திரர் காலத்தில் தென்னகத்தைத் தாண்டாத சங்கர மட செல்வாக்கும் புகழும், ஜெயேந்திரர் காலத்தில் உலகெங்கும் பரவியது. குறிப்பாக வட இந்தியாவில் சங்கர மடத்துக்கு இன்று பெரும் அந்தஸ்து உள்ளது.
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் ஒரு நிகர்நிலைப் பல்கழைக் கழகம், பல சிபிஎஸ்இ பள்ளிகள், அதன் கிளைகள் என நாடெங்கும் வியாபித்துள்ளது இந்த மடத்தின் சொத்துகள். ஏராளமான கோயில்கள் இந்த மடத்தின் நிர்வாகத்தில் உள்ளன. சிக்கிம் மாநிலம், பூடான், நேபாளம் என பல பகுதிகளில் சங்கர மடத்தின் நிர்வாகத்தில் கோயில்கள் உள்ளன.
அதேபோல, சங்கர மடத்தை அதிகார மையமாகவும் வைத்திருந்தார் ஜெயேந்திரர். நாத்திகரான கருணாநிதி காலத்திலும் சங்கர மடத்துக்கு செல்வாக்கு குறைந்ததில்லை. 1996-ம் ஆண்டு தேர்தல் முடிந்து, முடிவுகளுக்காக காத்திருந்த நேரத்தில், கருணாநிதிக்கு பூச்செண்டு, லட்டு பிரசாதம் (அப்போது ஏவிஎம் ராஜேஸ்வரி ஹாலில் கம்பன் விழாவில் இருந்தார் கருணாநிதி) முதல்வராக வாழ்த்துச் சொன்னவர் ஜெயேந்திரர். 2001-ம் ஆண்டுக்குப் பிறகுதான் ஜெயேந்திரரின் அதிகார மையம் ஆட்டம் கண்டது. அதுவும் ஆத்திகரான ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்த காலத்தில்.
சர்ச்சைகள் இருந்தாலும், சங்கர மடத்தை பண விஷயத்தில் சங்கட மடமாக வைக்காமல், அதன் காபந்தில் பல அமைப்புகள் இயங்கும் அளவுக்கு வழி செய்த பெருமை ஜெயேந்திரருக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.