அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்
காஞ்சி மடத்தில் இன்று ஜெயேந்திரரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரரின் உடல் பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சி சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு நேற்று காலை மூச்சுதிணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக காஞ்சி சங்கர மடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அங்கிருந்து சங்கர மடத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் அரசியல், சினிமா பிரமுகர்கள், ஆன்மித தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து இன்று காலை ஜெயேந்திரரின் உடலுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன.
அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரரின் உடலை பெரிய சங்கரச்சாரியாரின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவரது உடல் பிருந்தாவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.