அயோத்தி பிரச்னையில் மத்தியஸ்தராக பேச்சுவார்த்தை நடத்திய ஜெயேந்திரர்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியவர் ஜெயேந்திரர்.
Recommended Video
காஞ்சிபுரம் : அயோத்தியில் இருந்த ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி பிரச்னைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர். சில முறைகள் இவர் மத்தியஸ்தராக இருந்து இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால் இவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதிக்கு இடையிலான பிரச்சினை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அயோத்தி பிரச்னை எழுந்தது முதலே நீதிமன்றத்திற்கு வெளியே இந்தப் பிரச்னை குறித்து கலந்து ஆலோசித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ஜெயேந்திரர்.
இந்து அமைப்புளுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஜெயேந்திரர் முயற்சி செய்தார். இதற்காக கடந்த சனிக்கிழமை லக்னோவுக்கு சென்ற அவர், அங்குள்ள முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்காக 2011ம் ஆண்டில் புனேவில் நான் இமாம்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் அயோத்தி பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம். பின்னர் தொல்லியல் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்த முடியாத நிலை உள்ளது. இங்கு தொழுகை நடத்துவதற்கு அனுமதி வாங்குவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்று அப்போது பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் உடன்பட்டு ஏற்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு சென்றதால் பேச்சுவார்ததை பலனில்லாமல் போனது.
இதே போன்று 2014ம் ஆண்டில் ராமர் கோயில்-பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரர்களான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் காலீத் ரஷீத் பிராங்கி மஹெலியுடன் ஜெயேந்திரர் முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார். மூடிய கதவுகளுக்குள் இருவருக்கும் இடையே சுமார் ஒருமணி நேரம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற சமரச பேச்சு வார்த்தையில் ஜெயேந்திரர் ஈடுபடுவது முதன்முறை அல்ல. ஏற்கெனவே அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் தலைவராக இருந்த மவுலானா ரப்பே ஹசன் நத்வீயுடன் மார்ச் 2002-ல் பேச்சுவார்த்தை நடத்தினார். இது சுமார் ஒரு வருடத்துக்கு தொடர்ந்த போதிலும் ஜெயேந்திரரால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சி மீண்டும் தோல்வி அடைந்தது.
தன்னுடைய மடாதிபதிக்கான பொறுப்புகளுக்கு இருக்கும் சட்டங்களைக் கடந்து ஜெயேந்திரர் அயோத்தி பிரச்னையில் தலையீடு செய்தார் என்று பாஜகவினர் பெருமையாகச் சொல்கின்றனர். சாதி, மதங்களைக் கடந்து மக்கள் நலனுக்காக அக்கறையோடு செயல்பட்டவர் ஜெயேந்திரர் என்றும் அவரின் வழிபாட்டாளர்கள் கூறுகின்றனர்.