முருகனின் ஜீவசமாதி தீவிரம்.. சிறையில் 6வது நாளாக தொடர் உண்ணாவிரதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் ஜீவசமாதி அடைய விரும்பி இன்று 6வது நாளாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன் இன்று 6வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து இதனைத் தொடர்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் தான் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார்.
பழங்கள் மட்டும் உண்டு..
இதனைத் தொடர்ந்து, கடந்த 4ம் தேதியில் இருந்து முருகன் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். பின்னர் 18ம் தேதியில் இருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்து வருகிறார். மேலும் யாரிடமும் பேசாமல் மவுனவிரதமும் இருந்து வருகிறார்.
பிரதமருக்குக் கடிதம்
இதனைத் தொடர்ந்து, தான் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முருகன் கடிதம் எழுதியுள்ளார். சிறைத்துறையின் மூலம் அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதிகாரிகள் அழுத்தம்
இதனிடையே சிறை அதிகாரிகள் விரதத்தைக் கைவிடுமாறு முருகனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல் சோர்வாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
6வது நாள் உண்ணாவிரதம்
இதனைத் தொடர்ந்து, முருகன் இன்று 6வது நாளாகத் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். இதனால் அவரது ஜீவசமாதி விருப்பம் தீவிரம் அடைந்துள்ளது.