மீண்டும் உண்ணா விரத போராட்டம்.. வைரமுத்துவிற்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் காலக்கெடு!
மீண்டும் உண்ணா விரத போராட்டம் இருக்க போவதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: மீண்டும் உண்ணா விரத போராட்டம் இருக்க போவதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்த முறை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் இரண்டாவது முறையாக உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதில் இருந்து இந்த பிரச்சனை இருக்கிறது.
வைரமுத்து தான் பேசியதற்கு ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிப்ரவரி 3ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்து இருக்கிறார்.
சர்ச்சை
தனியார் பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
ஜீயர் போராட்டம்
வைரமுத்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் போராட்டம் அறிவித்து இருந்தார். கடந்த 16 தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர் காலக்கெடு விதித்து இருந்தார். வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை என்பதால் ஜீயர் 17ம் தேதி தனது உண்ணாவிரத்தை தொடங்கினார்.
பாதியில் கைவிட்டார்
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக ஜீயர் கூறினார். ஆனால் அதற்கு மறுநாளே அவர் தனது உண்ணா விரதத்தை கைவிட்டார். மேலும் அந்த பிரச்சனை அதோடு முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
மீண்டும்
தற்போது மீண்டும் ஜீயர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். பிப்ரவரி 3ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வைரமுத்துவிற்கு காலக்கெடு விதித்து இருக்கிறார். அதற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.