ஊனமுற்றோருக்கான சர்வதேச செஸ் போட்டி... தங்கம் வென்ற திருச்சி ஜெனித்தா - வீடியோ
ஸ்லோவாகியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய ஜெனித்தாவுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி: சர்வதேச ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டியில் தங்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜெனித்தா ஆண்டோவுக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெனித்தா ஆண்டோ. மூன்று வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டதால் இரு கால்களும் செயல் இழந்து அவரால் நடக்க முடியாது. ஒரு கையும் செயல்படாத நிலை உண்டானது.
இந்நிலையில் அவர் தந்தை ஆண்டோ அவருக்கு செஸ் விளையாட பயிற்சி அளித்தார். தன்பிறகு செஸ் விளையாட்டே அவரது உலகம் ஆனது. இதுவரை உலக ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டியில் 4 முறை தங்கம் வென்றுள்ளார்.
தற்போது, ஸ்லோவாகியா நாட்டில் நடைபெற்ற 17ஆவது உடல் ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதில் இந்தியாவில் இருந்து சென்ற ஜெனித்தா போட்டியிட்டு 5.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். அவர் ஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து திரும்பி வந்த போது திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.