நடை தளர்ந்தாலும் தடையேதுமில்லை.. செஸ் சாம்பியனாக சாதிக்கும் திருச்சி ஜெனிதா!
போலியோவால் பாதிக்கப்பட்ட திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த ஜெனிதா விடாமுயற்சியால் செஸ் சாம்பியனாக மாறிய வெற்றிக்கதை.
சென்னை : மாற்றுத்திறனாளி என்பதை சாபக்கேடாக நினைக்கும் சமூகத்தில் அறிவைத்தீட்டி விளையாடும் உலக செஸ் போட்டியில் 5வதுமுறையாக சாம்பியன் பட்டம் பெற்று ஜொலிக்கிறார் திருச்சியைச்சேர்ந்த ஜெனிதா ஆன்ட்டோ.
'அசைக்கமுடியாத உறுதியும் திடசித்தமும் கொண்டவன் உலகத்தைத் தன் வழியில் தானே உருவாக்கிக் கொள்வான்' என்பதை உணர்த்தியுள்ளார் திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெனிதா ஆன்ட்டோ. உலக அளவில் செஸ் போட்டிகளில் பங்கேற்று 5 முறை சாம்பியன் பெற்றுள்ள அவரிடம் பேட்டி கண்டது ' தமிழ் ஒன் இந்தியா' அதன் விவரங்கள்:
திருச்சியின் நடுத்தர வர்க்க கணித ஆசிரியர் இருதயராஜின் மூன்றாவது மகளாக பிறந்த ஜெனிட்டா. பிறந்தது முதல் 3 வயது வரை இயல்பான குழந்தையாகவே இருந்துள்ளார். திடீரென தாக்கிய போலியோ நோயில் ஜெனிதாவின் இரண்டு கால்கள், முகுதுக் தண்டுவடம், ஒரு கை செயலிழந்து விட்டது. "எனக்கு 3 வயது இருக்கும் போது போலியோ நோய் தாக்கிவிட்டது அதில் விவரம் தெரியாத வயதில் நடந்த அந்த சம்பவம் என்னுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது என்கிறார் ஜெனிதா.
திறமைக்கு தடையில்லை
உடலில் ஊனம் இருந்தாலும் கல்வி பயின்றுள்ளார் ஜெனிதா, தொடர்ந்து 8ம் வகுப்பு வரை தாய் தந்தை உதவியுடன் பள்ளி சென்று படித்து வந்துள்ளார். ஆனால் அதற்கு மேல் பள்ளி சென்று படிக்க விருப்பமின்றி வீட்டிலிருந்தபடியே படித்து தேர்வெழுதி, பி.காம் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
இது எல்லோர் வாழ்விலும் நடக்கும் இயல்பான விஷயம் தான், ஆனால் ஜெனிதா படிப்போடு உடல் பிரச்சினையை காரணம் காட்டி வீட்டிலேயே முடங்காமல் மேற்கொண்ட முயற்சி தான் இன்று அவரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அப்பாவே குரு
8ம் வகுப்பு மாணவர்களுக்கு அப்பா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது அதில் சாதித்த மாற்றுத்திறனாளிகள் பற்றி ஒரு பிரிவு வந்துள்ளது. இதைப் பயிற்றுவித்தவர் எனக்கும் ஏன் இதை முயற்சித்து பார்க்கக் கூடாது என்று நினைத்தார். இதோடு அப்பாவும் கல்லூரி காலங்களில் செஸ் விளையாட்டில் ஜாம்பவானாக இருந்ததால் எனக்கு அவரே குருவாக மாறி செஸ் கற்றக்கொடுத்தார்" என்கிறார் ஜெனிதா.
வெற்றி தந்த ஊக்கம்
எப்போதும் ஒரு விளையாட்டில் முதல் வெற்றியே அடுத்தகட்டத்திற்கு விரல்பிடித்து அழைத்துச்செல்லும், ஜெனித்தாவுக்கும் அப்படித்தான். "10வது வயதில் சதுரங்க விளையாடத் தொடங்கினேன், 3 மாதத்திலேயே ஒரு போட்டியில் முதன்முதலில் பங்கேற்று அதில் முதல் பரிசு பெற்றேன், அதுவே எனக்கு உத்வேகமாக அமைந்தது" என்கிறார் நம்பிக்கை நட்சத்திரம் ஜெனிதா. இதனைத் தொடர்ந்து தந்தையிடமே செஸ் கற்றுக் கொண்டு 2007ம் ஆண்டு முதன்முதலில் வெளிநாட்டில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று அதில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.
நிதி கிடைக்காமல் பாதிப்பு
இந்தியாவில் உள்ள 70% விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை ஜெனிதாவுக்கும் இருந்தது. தந்தையின் வருமானத்திலேயே குடும்பம் நடக்க வேண்டும் என்பதோடு உலக அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க செல்லும் போது இருவரின் பயணச்செலவு, விடுதி செலவு என அனைத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் 6 வருட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் 2013ல் உலக அளவில் நடைபெற்ற மாற்றத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் விடாமுயற்சியின் அடையாளமான ஜெனிதா.
5 முறை சாம்பியன்
2014, 2015, 2016, 2017 என தொடர்ச்சியாக அடுத்தடுத்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியாக quintuple சாம்பியன்பட்டத்தை வென்றுள்ளார் ஜெனிதா. 2014 வரை எங்களது சொந்த நிதியிலேயே உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றோம், 2015ம் ஆண்டு முதல் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிதியுதவி செய்துள்ளது, ஆனால் இதையும் பெரும் சிரமம் பெற்றே வாங்கியுள்ளார் ஜெனிதா. போலந்து, ஜெர்மனி, நார்வே, அர்ஜெண்டினா, கடைசியாக ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளில் பல ஜாம்பவான் போட்டியாளர்களுடன் மோதியுள்ளார் ஜெனிதா.
அரசு ஊக்கமளிக்க வேண்டும்
விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் கருதாமல் மற்றத்திற்கான தூண்டுகோளாக கருதும் ஜெனிதா, தடைகளை தாண்ட உதவிகளை எதிர்பார்க்கிறார். மற்ற நாட்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது போல நமது நாட்டில் செய்வதில்லை என்பது என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு தடையாக மாறிவிடுகிறது.
கிராண்ட் மாஸ்டர் கனவு
வெளிநாடுகளில் வீரர்கள் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அவர்களுக்கு அந்தந்த நாடுகள் நிதியுதவி முதல் அனைத்து சலுகைகளையும் அளிக்கிறது என்று கூறுகிறார் ஜெனிதா. இந்தியாவில் இருந்து சதுரங்கப் போட்டியில் பங்கேற்று வரும் ஒரே மாற்றுத் திறனாளி வீரரான ஜெனிதா, சத்தமில்லாமல் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுவிட வேண்டும் என்பதே இவரின் கனவு.