மீண்டும் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்... காலவரையற்ற கடையடைப்பு!
சென்னை: கலால் வரி உயர்வைக் கண்டித்து காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தங்கம் மற்றும் வைர நகை கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய பொது பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வைர நகைகள் மீதான கலால் வரியை ஒரு சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு. இதனைக் கண்டித்து தங்கம் மற்றும் வைர நகை கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்தது. இதனால், கடந்த ஞாயிறன்று கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தங்கம், வைர நகை கடை உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நகைக்கடைகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கின.
காலவரையற்ற கடையடைப்பு...
இந்நிலையில், தற்போது மீண்டும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
எதிர்ப்பு..
இது தொடர்பாக அகில இந்திய கற்கள் மற்றும் தங்க நகைகள் கூட்டமைப்புத் தலைவர் ஸ்ரீதர் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘எங்களது கூட்டமைப்பில் உள்ள 358 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், கலால் வரி உயர்வை எதிர்த்து காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம்.
போராட்டம் தொடரும்...
அரசிடம் இருந்து எங்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை இந்தப் போராட்டம் தொடரும்' என்றார்.
வர்த்தகம் பாதிப்பு...
கடந்த ஆறு நாள் கடையடைப்பு போராட்டத்தின் மூலமாக சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிய கடைகள்...
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து பெரிய கடைகள் அடைக்கப்பட்டுள்ள போது, பல இடங்களில் சிறிய நகைக்கடைகள் திறந்தே காணப்படுகின்றன.