நகைக்காக மாணவி கொலை: பள்ளிக்கு தங்க நகைகள் அணிந்து வர கல்வித்துறை தடை
சென்னை: பள்ளிக்களுக்கு மாணவ, மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்குமுன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அணிந்திருந்த தங்க நகையால் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்தே பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் பள்ளி மாணவ-மாணவிகள் தமது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வீட்டிற்கு செல்லும்போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
நகை அணிய தடை
பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வருவது, ‘செல்போன்' போன்ற உபகரணங்களை எடுத்து வருவது கூடாது.
வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது தனியாக வருவதை தவிர்த்து, பள்ளி மாணவ-மாணவிகளுடன் குழுவாக இணைந்து வர வேண்டும்.
சாலைகளில் கவனம்
பள்ளிக்கு வரும் வழியில் நீர் நிலைகள் ஏதேனும் இருப்பின் அதன் அருகில் செல்லக்கூடாது.
ரயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள் இருப்பின் கவனமாக எச்சரிக்கையுடன் அதனை கடக்க வேண்டும்.
ரயில்கள், பஸ்களில் பயணம் செய்யும்போது படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யக்கூடாது.
அறிமுகம் இல்லாதவர்கள்
பள்ளிக்கூடத்திற்கு வரும்போதும், வீட்டுக்குச் செல்லும்போதும், எந்த நேரத்திலும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவது, அவர்கள் தரும் மிட்டாய், உணவு பொருட்களை வாங்கக்கூடாது. வாங்கி சாப்பிடக்கூடாது.
சண்டை போடக்கூடாது
பள்ளிக்கூடத்தில் படிக்கும் சக மாணவ, மாணவியர்கள் அல்லது பிற பள்ளி மாணவ, மாணவிகளுடன் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள் கேலி கிண்டல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
பள்ளி முடிந்த பின்னர்
பெற்றோரிடம் தெரிவிக்காமல் பள்ளிக்கூட நேரம் முடிந்த பின்னர் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்கள் வீடு, சினிமா காட்சி போன்ற வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது.
மேற்குறித்த, அறிவுரைகளை பள்ளிக்கூட தலைமையாசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தின்போது மாணவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்" என்று கூறி உள்ளார்.
நகைக்காக கொலை
தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் திருடர்களும், வழிப்பறி கொள்ளையர்களும்தான் பெண்களிடம் நகைகளை பறித்துச் செல்வார்கள். ஆனால் காதில் அணிந்திருந்த கம்மலுக்காக சக மாணவியே தோழியை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவேதான் பள்ளி மாணவிகள் நகைகள் அணியத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.