வீட்டை உடைத்து நகை கொள்ளை… மர்ம நபர் கைவரிசை.. போலீசார் தேடுதல் வேட்டை
பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி: பகவதிபுரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமம் அருகே தெற்கு பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஷிவானி என்ற மகள் உள்ளார். இவர் சிவகாசியில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில் தங்களது மகள் ஷிவானியை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஷ்வரி சிவகாசிக்கு புறப்பட்டுச் சென்றார். அதிகாலை 3 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு மகேஷ்வரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்ற போது வீட்டின் உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் பின்பக்க கதவு வழியாக ஓடினார்.
இவர்கள் திருடன், திருடன் என கூச்சலிட்டதுடன் அந்த வாலிபரையும் துரத்தினார்கள். வீட்டை விட்டு வெளியே சென்ற கொள்ளையன் அந்த பகுதியில் தயார் நிலையில் நின்ற கார் ஒன்றில் ஏறி தப்பி ஓடி விட்டான். இதைத் தொடர்ந்து மகேஷ்வரியும், ஷிவானியும் வீட்டின் மற்ற அறைகளுக்குச் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பல பவுன் நகை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வேணுகோபால், இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.