குறை குடம் கூத்தாடும்... தினகரன் குரூப்புக்கு அறிவுரை சொன்ன எச். ராஜாவுக்கு ஜெயானந்த் பதிலடி
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிமுக போன்ற கட்சிகளுக்கு அறிவுரை வழங்குவதை காட்டிலும் அவரது கட்சிக்கு கணிசமான வாக்குகளை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்தார்.
சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குறை குடம் கூத்தாடும் என்பதற்கு உதாரணம் என்று ஜெயானந்த் திவாகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது அதிமுகவில் எடப்பாடி அணிக்கும், தினகரன் அணிக்கும் அதிகார போட்டி நடைபெற்று வருகிறது. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வருக்கு எதிராக 19 எம்எல்ஏ-க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த தலைமை கொறடா ராஜேந்திரன், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் ஆளுநரை பார்த்த 19 பேரின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்கள் அரசு கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தால், அதன் பிறகு ஒரு நொடிக்கூட அவர்கள் எம்.எல்.ஏ-க்களாக நீடிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இதற்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் எச்.ராஜா ஒரு குறை குடம். குறை கூடம் எப்போதும் கூத்தாடும். அதிமுக போன்ற கட்சிக்கு அறிவுரையோ அல்லது கருத்து கூறவோ முயற்சிப்பதற்கு முன்னர் எச்.ராஜா சார்ந்த கட்சிக்கு கணிசமான வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று ஜெயானந்த் குறிப்பிட்டுள்ளார்.