ஆமா, சசிகலாவை நீக்கும் முன்பே இவங்கள அவர் நீக்கிட்டாரே... புது டிவிஸ்ட் கிளப்பும் ஜெயானந்த்!
சென்னை: சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அறிவிக்கும் முன்பே அவர்களை பொறுப்புகளில் இருந்து சசிகலா நீக்கிவிட்டதாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் கூறியுள்ளதாவது: பன்னீர்செல்வமும், எடப்பாடியும் இணைந்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் மறைமுகமாக சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அப்படியானால், சசிகலா பொதுச்செயலாளர் என்ற வகையில் பிறப்பித்த உத்தரவில் பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கிவிட்டார். அதேபோல எடப்பாடி பழனிச்சாமியை தலைமை கழக செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கியிருந்தார்.
எனவே, பொதுச்செயலாளரால் பதவி நீக்கம், உறுப்பினர் பதவி பறிப்பு போன்றவற்றுக்கு ஆளானவர்கள் இணைந்து பொதுச்செயலாளரை நீக்க முடியாது. மேலும், சசிகலாவை பொதுச்செயலாளர் என்று ஏற்கனவே பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒப்புக்கொண்டனர்.
எனவே இவர்கள் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க முற்படுவது எம்ஜிஆர் எழுதி வைத்த கட்சி சட்டத்திற்கு விரோதமானது. இந்த நேரத்தில், 'சின்னம்மாவை' பொதுச்செயலாளர் என்று ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.