நெல்லை நகைக்கடை கொள்ளை... வேலூர் அருகே சிக்கிய ஜார்க்கண்ட் திருடன்
நெல்லை நகைக் கடையில் 37 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காவிக் ஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அழகர் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் நேற்று காலை மர்ம நபர்கள் 37 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காவிக் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டையில் உள்ள அழகர் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் நேற்று காலை மர்ம நபர்கள் 37 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர். அந்த கும்பலைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவானது. தொடர்ந்து அந்த புகைப்படமும் வெளியிடப்பட்டது.
நகைக் கொள்ளை
முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. நகைக்கடையின் அருகில் புதிய கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் கட்டப்பட்டுள்ள கம்புகள் வழியாக ஏறி நகைக்கடையின் மாடியை அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு கதவை கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டை
கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து நெல்லை மாநகர கமிஷனர் திருஞானம் உத்தரவிட்டார். நகைக்கடையின் அமைப்பை முழுமையாக அறிந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கருதும் போலீசார் கடையின் முன்னாள் ஊழியர்கள் குறித்தும் விவரம் சேகரித்து வந்தனர்.
வடமாநில கொள்ளையர்கள்
இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட 37 கிலோ தங்க நகைகள் வேலூரில் மீட்கப்பட்டுள்ளது. சித்தூர், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த 5 வட மாநிலத்தவர்களிடம் இருந்து இந்த நகைகள் மீட்கப்பட்டது.
கொள்ளையன் கைது
சோதனை நடந்து கொண்டிருந்தபோதே அந்த ஐந்து பேரும் வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர். சுமார் 100 போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அந்த ஐந்து பேரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. நகைக் கடை கொள்ளை தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காவிக் ஷேக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நால்வரை பிடிக்க தீவிரம்
ஆந்திர-தமிழக எல்லை வன பகுதியில் பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காலிக்ஷேக் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 10 தனிப்படையினர் இரவு முழுவதும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய நால்வரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.