மழை, வெள்ளம், எலிக் காய்ச்சல்... மக்களின் மன பயங்களை நீக்க ப்ரீகவுன்சிலிங்!
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மன பயம் மற்றும் அழுத்தத்தைக் குறைக்க கவுன்சிலிங் வழங்கி வருகிறது ஜி பவுண்டேஷன் என்ற அமைப்பு.
இம்மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கட்டிய உடைகளோடு வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்.
இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு, சிறுகச் சிறுக சேர்த்த உடைமைகளை இழந்து, ஒரே நாளில் வெள்ளத்தால் அகதிகள் ஆனார்கள். அரசு நிவாரண நிதி கொடுத்து மீண்டும் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
உளவியல் பயிற்சி...
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவியைப் போலவே மன ரீதியான உதவியும் அதிகம் தேவைப் படுகிறது. வெள்ளத்தில் சிக்கிய காட்சிகள் அவர்களது மனக்கண்ணில் இருந்து நீங்க இன்னும் காலம் பிடிக்கும். ஆனால், அதற்குள்ளாகவே இன்னும் 250 செமீ மழை பெய்யும், சென்னையே மூழ்கிப் போகும் போன்ற வதந்திகள் அவர்களது மனதை மேலும் பாதித்து வருகின்றன.
பிடிஎஸ்டி...
நிஜமாகவே மீண்டும் வெள்ளம் வருமா? நமது எதிர்காலம் என்ன? எப்படி இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வரப் போகிறோம் என இரவுகளில் தூக்கம் வராமல் அவதிப் படுபவர்கள் ஏராளம். அப்படியே தூங்கினாலும் கனவிலும் பயம் துரத்தும். மக்களின் இந்த மனநிலை பிடிஎஸ்டி எனப் படுகிறது.
மன அழுத்தம்...
இதுவும் ஒரு வித மனநோய் போன்று தான் என்கிறார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக கவுன்சிலிங் கொடுத்து வரும் சமூக உளவியல் நிபுணரான கிருஷ்ணா சுரேஷ். ஜி பவுண்டேஷன் என்ற பெயரில் இந்தச் சேவையை அவர்கள் செய்து வருகின்றனர்.
துரத்தும் பயம்...
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு மீண்டும் வெள்ளம் வருமோ என்ற பயம் தொடர்ந்து அடிமனதில் இருந்து கொண்டே இருக்கும். இதனால் ஜன்னலைத் திறந்து பார்த்தால் வெளியே வெள்ளம் இருக்குமோ, லேசாக தூறல் போட்டாலும் கனமழை பெய்யுமோ, குப்பையைப் பார்த்தால் எலிக் காய்ச்சல் வருமோ என்பது போன்ற பயம் துரத்திக் கொண்டே இருக்கும்.
இலவசம்...
இப்படிப்பட்டவர்களுக்குத் தான் கவுன்சிலிங் அவசியமாகிறது. நேரிலோ, போன் மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ இலவசமாக எங்களிடம் கவுன்சிலிங் பெறலாம்.
நம்பிக்கை...
பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் மன ரீதியான ஆறுதலைத் தருவோம். கவலைப்பட வேண்டாம் எத்தகைய பேரிடர் ஏற்பட்டாலும் நம்மால் தப்பிக்க இயலும் என்ற நம்பிக்கையைத் தருவோம்.
பயிற்சிகளும் உண்டு...
பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் பொறுத்து இந்த கவுன்சிலிங்க் அமையும். சிலருக்கு ஒன்றிரண்டு அமர்வு போதுமானது. அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் இருந்து மீள்வதற்கான எளிய பயிற்சிகளும் கற்றுத் தரப்படும்" என்கிறார்.
சேவை அடிப்படையில்...
இந்த கவுன்சிலிங்கானது முழுக்க முழுக்க சேவை அடிப்படையில் இலவசமாகத் தரப்படுகிறது. தேவைப்படுபவர்கள் அணுகினால் பள்ளி, கல்லூரிகளுக்கும் நேரில் சென்று இலவச கவுன்சிலிங் தர தயாராக இருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது.
மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு 9840075077 என்ற எண்ணையோ அல்லது www.ji-foundation.org இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம்.