சென்னையில் இந்த வாரம் அரசு வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு அழைப்பு!
சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று சென்னையில் துவங்குகின்றது.
இதுகுறித்த அரசு செய்தி குறிப்பில், "படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந்தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம், சென்னை கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் தாலுகாவுக்கும், நாளை பெரம்பூர், அயனாவரம் தாலுகாவுக்கும் நடக்கிறது.
சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 25 ஆம் தேதி, எழும்பூர், அமைந்தகரை தாலுகாவுக்கும், 27 ஆம் தேதி மயிலாப்பூர், வேளச்சேரி தாலுகாவுக்கும் நடக்கிறது.
சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 28 ஆம் தேதி கிண்டி, மாம்பலம் ஆகிய தாலுகாவுக்கு நடக்கிறது.
மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ளவர்களும், இதர தாலுகாக்களில் உள்ளவர்களும் இந்த முகாம்களில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத்துறை அலுவலகத்தை 044-22501620, 22501622 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
சிறப்பு முகாமில் கலந்துகொள்ள 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது பூர்த்தி ஆகியவற்றுக்கு சான்றாக பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், முகவரிக்கு குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.