சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப்பணி : அமைச்சர் சம்பத்
சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் சம்பத் உறுதியளித்துள்ளார்.
அரியலூர் : அரியலூர் மற்றும் ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என்றும் தொழிற்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்து உள்ளார்.
அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் பராமரிப்பு,மற்றும் புனரமைப்பு பணிகள் ரூ750 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது . இந்தப் பணியை தொழிற்துறை அமைச்சர் சம்பத் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னா் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையின் விரிவாக்கப்பணி 100 சதவிகிதம் முடிவடையும் தருவாயில் உள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் சோதனை முறையில் ஆலை இயக்கப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையான உற்பத்தியை எட்டிவிடும். ஆலங்குளம் மற்றும் அரியலூர் சிமெண்ட் ஆலைகளின் மூலம் ஆண்டுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி கிடைக்கும்.
அரியலூரில் மட்டும் 15 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும். சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அரசு சிமெண்ட் ஏஜென்சி மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி கூறியதால் தான் அதிமுகவில் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் செல்ல மறுத்துவிட்டார்.