தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் போட்டியிடக் கோரி விருப்பமனு!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்று கோரி சமீபத்தில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் போய் இணைந்த ஜோயல் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சீட் கேட்டு பலரும் விருப்ப மனுக்களை அளித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தென் மாவட்டத் தொகுதி ஒன்றில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் ஜோயல் விருப்ப மனு அளித்துள்ளார்.
இவர் சமீபத்தில் மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர். தற்போது மாநில இளைஞர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார். இன்று அவர் தனது ஆதரவாளர்களோடு அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்தார்.
அதில், தென்மாவட்ட தொகுதிகளான தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் மு.க.ஸ்டாலின் போட்டியிடக் கோரி அவர் மனு அளித்துள்ளார்.
இதுவரை ஸ்டாலின் சென்னையில் மட்டுமே போட்டியிட்டு வந்துள்ளார். நீண்ட காலமாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வந்த அவர் கடந்த தேர்தலில் முதல் முறையாக கொளத்தூரில் போட்டியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.