இளங்கோவனும் பேசாமல் வாசனுடன் வந்து சேர வேண்டும்... ஜான் ஜேக்கப் அதிரடி!
குழித்துறை: ஜி.கே.வாசனுடன் ரங்கராஜன் எம்.எல்.ஏ மட்டுமே போயுள்ளார் என்று கூறியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, நானும் வாசனுடன்தான் இருப்பதாக பதிலளித்துள்ளார் குழித்துறை எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜான் ஜேக்கப் குழித்துறையில் இன்று கூறுகையில்,
1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் உதயம் ஆன போது குமரி மாவட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் மூப்பனாருடன்தான் இருந்தார்கள். அதில் முக்கிய பங்காற்றியவர் தற்போதைய குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ்.
நானும் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வும் இன்று எம்.எல்.ஏ.க்களாக இருக்க காரணம் ஜி.கே. வாசன்தான். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே எங்களுக்கு அவர் எம்.எல்.ஏ. சீட் பெற்றுக் கொடுத்தார். காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் மக்கள் தலைவராக இருந்தவர் மூப்பனார். அதன் பிறகு வாசன்தான்.
இதைத் தாண்டி தமிழக காங்கிரசில் திறமையான தலைவர்கள் உருவாகவில்லை. இளங்கோவன் பேச்சுதிறன் மிக்கவர். செயல்திறன் எல்லாம் வாசனை சாரும். நான் ஆரம்பத்தில் இருந்தே வாசன் தனி இயக்கம் தொடங்கியதில் இருந்தே வாசனிடம்தான் இருக்கிறேன்.
இளங்கோவன் இதில் குழப்ப வேண்டாம். அவரும் வாசன் அணியில் இணைய வேண்டும்.
பிரின்ஸ் சட்டசபையில் அதிகமாக பேசியதாக கூறுகிறார். அவர் அ.தி.மு.க.வை மட்டும்தான் புகழ்ந்து பேசி உள்ளார். நான் மக்கள் பிரச்சினை பற்றி கூறி உள்ளேன். 18 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அப்போது எங்களுக்கு கைகொடுக்க பல கட்சிகள், இயக்கங்கள் தயாராக உள்ளது. நாங்கள் தற்போது எங்கள் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நீர்க்குமிழிகள். வாசனுடன் இருப்பவர்கள் நீரூற்று.
தமிழ்நாட்டில் 75 சதவீதம் காங்கிரசார் வாசனுடன் புதிய அணியில் இணைந்து உள்ளனர். தற்போது இந்த அணி மகத்தான வெற்றி நடைபோடுகிறது. அடுத்து தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் முடிவெடுக்கும் பெரும் சக்தியாக இது வளரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
குழித்துறையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைக்க பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இன்று அந்த பணம் என்ன ஆனது? என்ன செய்யப்பட்டது? என்று தெரியவில்லை. இந்த பணம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய பணம். இதை பற்றி விளக்க வேண்டும் என்றார் அவர்.