இமானுவேல்சேகரன் கொலையில் முத்துராமலிங்க தேவருக்கு தொடர்பில்லையா? வைகோவுக்கு ஜான்பாண்டியன் கண்டனம்
சென்னை: தலித் தலைவர் இமானுவேல்சேகரன் படுகொலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தொடர்பு இல்லை என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளதற்கு என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ஜான்பாண்டியனின் தமமுக. ஆனால் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தமமுக வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
தமமுக தலைவர் ஜான்பாண்டியன் திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸை எதிர்த்து போட்டியிடுகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன், சட்டசபை தேர்தலில் வைகோ பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.
தலித் தலைவர் இமானுவேல்சேகரன் படுகொலைக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் தொடர்பு இல்லை என பொய் கூறுகிறார். தேர்தலுக்காகவே வைகோ இப்படி பொய் பேசிவருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது; கண்டனத்துக்குரியது என்றார்.
இம்மானுவேல் சேகரன்
தென்மாவட்டங்களில் தலித் மக்கள் ஆதிக்க சாதியினரால் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க போராடிய தலைவர் இமானுவேல்சேகரன். 1957-ம் ஆண்டு தென்மாவட்ட கலவரம் தொடர்பாக நடந்த அமைதிக் கூட்டத்தில் பங்கேற்ற மறுநாளே இமானுவேல்சேகரன் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்துதான் தமிழகம் மறந்திடமுடியாத முதுகுளத்தூர் கலவர சம்பவங்கள் நடைபெற்றன. பின்னர் முத்துராமலிங்கத் தேவரை இவ்வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.