அதிமுக கழற்றிவிட்டதால் திருவாடானையில் கருணாஸுடன் மோதும் ஜான்பாண்டியன்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 52 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான நடிகர் கருணாஸை எதிர்த்து திருவாடனை தொகுதியில் தாம் போட்டியிடுவதாகவும் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் இடம்பெற்றிருந்தது. மேலும் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் ஜான்பாண்டியன் கட்சி பங்கேற்றது.
ஆனால் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜான்பாண்டியன், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளதாக ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 52 தொகுதிகளில் தமது கட்சிப் போட்டியிடும் என்றும் தாம் திருவாடானை தொகுதியில் போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.
ஜான்பாண்டியன் போட்டியிடும் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான நடிகர் கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.