அதிமுகவுக்கு ஜான் பாண்டியன் ஆதரவு... 5 சீட் கேட்கிறார்!
சென்னை: ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. 5 தொகுதிகளை அதிமுக தரும் என்று எதிர்பார்ப்பதாக கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பண்ருட்டி வேல்முருகன், செ.கு.தமிழரசன், எஸ்.எம்.பாக்கர், ஷேக் தாவூது, கதிரவன், தனியரசு உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவரான ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற தேர்தலில் அதிமுக அணிக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு தீர்மான முடிவுபடி மீண்டும் ஆதரவு அளிக்க உள்ளோம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முறைப்படி தீர்மான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவரை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு உள்ளோம். அழைப்பு வந்ததும் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவோம்.
அதிமுகவில் 5 சீட்டுகளை கேட்டு எதிர் பார்த்து இருக்கிறோம். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் 25 லட்சம் தொண்டர்களை கொண்ட பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது. எனது தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குலவேலாளர் அமைப்பும், எங்கள் கட்சியும் அதிமுக வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை கட்சிக்காக ஒரு மாநாடு கூட நடத்தவில்லை. 5 ஆயிரம் தொண்டர்களை கூட கூட்டமுடியாத நிலையில் தான் கிருஷ்ணசாமி உள்ளார் என்றார் அவர்.