மனித உரிமைப் போராளிகளுக்கான அங்கீகாரம்.. 'ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் நெகிழ்ச்சி
சிறந்த தமிழ்ப் படம் என தேசிய விருது பெற்ற ஜோக்கர் படம் மனைத உரிமைப் போராளிகளுகான அங்கீகாரம் என படத்தின் இயக்குநர் ராஜு முருகன் கூறினார்.
சென்னை: ஜோக்கர் தமிழ் திரைப்படத்துக்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதும், அப்படத்தில் பாடிய சுந்தர் ஐயர் என்பவருக்கு சிறந்த பாடகருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜோக்கர் படக் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் தயாரிப்பாளார் எஸ்.ஆர் பிரபு ஜோக்கர் படத்துக்கு இரண்டு விருது கிடைத்திருப்பது பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என கூறினார்.
படத்தின் இயக்குநர் ராஜுமுருகன், கருத்து சுதந்திரத்துக்கான விருதாக இதை நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் மனித உரிமை போராளிகள் தான் மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்துத் தருகிறவர்கள். அவர்களுக்கு இந்த விருது ஒரு அங்கீகாரம். எந்த இயக்குநரும் படம் எடுக்கின்ற போது, தேசிய விருதை நினைத்து செயல்படுவதில்லை. இந்த படத்தில் உழைத்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி என்றார்.
ஜோக்கரின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கூறுகையில், சுந்தர் ஐயர் பாடிய முதல் பாடலுக்கே விருது என்பது மிக மகிழ்ச்சி. அவர் கிராமத்தில் இருந்து வந்தவர். அவருக்கு தேசிய அங்கீகாரம் என்பது ஒரு நல்ல கலைஞனுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.
படத்தில் முதன்மை கதாப்பாத்திரமாக நடித்த சோமசுந்தரம், தர்மபுரி செக்காம்பட்டி கிராமத்தில் தான் இந்த படம் ஷூட் செய்யப்பட்டது. விருது கிடைத்ததையடுத்து அந்த கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
குரு சோம சுந்தரத்துக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்காதது வருத்தமாகத்தான் உள்ளது என தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கூறினார்.