சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலாளர் மோகன் மரணம்
சென்னை: தினகரன் முதுநிலை செய்தியாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்க பொது செயலாளருமான மோகன் இன்று காலை காலமானார்.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (எம்யுஜே) பொது செயலாளராக இருந்தவர் மோகன், 54. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது. மோகன் சென்னை தினகரன் பத்திரிகையில் சீனியர் நிருபராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மோகனின் மறைவுக்கு பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
மோகனின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம். சுதேசமித்திரன், சத்ரியன், ஜூவி, தினமலர் பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.