எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? சென்னை போலீஸ் மீது பத்திரிகையாளர் கோர்ட் அவமதிப்பு வழக்கு
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாத சென்னை போலீசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யாத சென்னை போலீசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது பேஸ்புக்கில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். பின் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.ஆனால் கொஞ்ச நேரத்தில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் எஸ்.வி.சேகரை கைது செய்யாத சென்னை போலீசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் முரளி கிருஷ்ணா வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் கூட எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் எஸ்.வி.சேகர் சுதந்திரமாக நடமாடி வருகிறார். கடமையை செய்யாத போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.