நம்மை விட்டு மறைந்தார் பத்திரிகையாளர் ஞாநி!
Recommended Video
-ஆர்.மணி
சென்னை: 'பாதகம் செய்பவர்களை கண்டால் நாம் பயங் கொள்ளளாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’ இந்த வரிகள் கவிஞர் பாரதியின் வரிகள். இந்த வரிகளை, இரண்டாண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஜயகாந்த், ஒரு இடத்தில் பத்திரிகையாளர்களைப் பார்த்து காறி உமிழ்ந்த போது, ஒரு தொலைகாட்சி விவாதத்தில் இந்த சம்பவத்தைப் பற்றி நடைபெற்ற விவாதத்தில் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், ஞாநி பேசும் போது கூறினார்.
"இன்று பெரும்பாலான ஊடகங்கள், அது காட்சி ஊடகமாகட்டும் அல்லது அச்சு ஊடகமாகட்டும், ஆளும் அஇஅதிமுக வை (அப்போது ஜெயலலிதா முதலமைச்சர்) விமர்சிக்காமல், என்னைப் பற்றி மட்டும் கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் போய் ஜெ வையும், அவரது அரசைப் பற்றியும் சம்மந்தப்ப பட்டவர்களிடம் கேள்விகளை கேளுங்கள். அதை செய்ய துப்பில்லாமல், எதிர்கட்சிகளை மட்டும் கேட்கிறீர்கள்’ என்று சொல்லி விட்டு’ பத்திரிகையாளர்களைப் பார்த்து காறி உமிழ்ந்தார் விஜயகாந்த். ஞாநி. '’அதற்கும் ஒரு படி மேலே போய் விஜயகாந்த் காறி உமிழ்ந்ததில் எந்த தவறும் தார்மீக ரீதியில் இல்லை. பாரதியே இந்த வரிகளை கூறியிருக்கிறார். விஜயகாந்த் பேசியதில் உள்ள ஒரு நியாயத்தை நாம் உணர வேண்டும் என்று மேலும் கூறினார் ஞாநி சங்கரன்’’.
ஜனவரி 4, 1954 ல் பிறந்த ஞாநியின் இயற்பெயர். சங்கரன். ஞாநி சங்கரன் என்று தான் அவர் அழைக்கப் பட்டார். அவர் இன்று அதிகாலை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் உடல் நலக் குறைவால் இறந்து போனார். பல நாட்களாக சிறு நீரக கோளாறால், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார் ஞாநி. சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்திருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
மனசாட்சி உள்ள பல பத்திரிகையாளர்களும் விஜயகாந்த் செய்தது தவறு, மன்னிக்க முடியாத தவறு, என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ஞாநி இவ்வாறு பேசினார். இதற்கு அவருக்கு எதிராக பல பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று கடைசி வரையில் தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். ஞாநி இந்த விஷயத்தில் சொன்னது சரியானது தான் என்றே சில பத்திரிகையாளர்கள் தற்போது பேசத் துவங்கியிருக்கிறார்கள்.
ஞாநி யார்? ஊடகத்துக்கும், நாடகத் துறைக்கும் அவரது பங்களிப்பு என்ன? அவருடைய குணாம்சங்களில் முக்கியமானது என்ன? என்று நாம் எதனைச் சொல்ல வேண்டும்? நாம் சற்றே விரிவாகப் பார்க்கலாம் ….
ஜனவரி 4, 1954 ல் பிறந்த ஞாநியின் இயற்பெயர். சங்கரன். ஞாநி சங்கரன் என்று தான் அவர் அழைக்கப்பட்டார். 1970 களில் சுமார் 6 ஆண்டுகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தியாளராக பணி புரிந்தார். அவருடைய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக எக்ஸ்பிரஸ் நிருவாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் போட்ட வழக்கில் வெற்றி பெற்று எக்ஸ்பிரஸில் சேர்ந்தார். ஒரு நாள் மட்டும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வேலை செய்து விட்டு, ராஜினாமா செய்து விட்டு, இனிமேல் மாதக் கூலிக்காக, முழுநேர ஊழியனாக, எங்கும் வேலை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு, 'சுதந்திர பத்திரிகையாளனாக’ செயற்படத் துவங்கினார்.
அதன்படி அவருடைய வாழ்க்கையில் வேறெங்கும், அவர் மறைந்து போகும் வரையில் மாதாந்திர சம்பளத்துக்காக வேலை செய்யவில்லை. கடைசி வரையில் பல பத்திரிகைகளில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மற்றும் தேசீய அளவில் பெயர் பெற்ற பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார். திமுக வின் முன்னாள் அமைச்சர், ஆற்காடு வீராசாமி நடத்திய 'எதிரொலி’ என்ற பத்திரிகையிலும் எழுதினார். 1987 – 1988 ம் ஆண்டு காலத்தில் 'புதையல்’ என்ற, 'முரசொலி’ பத்திரிகையின் வாராந்திர சப்ளிமென்ட்ரி ஆக வந்த இதழில் ஆசிரியாக இருந்து எழுதினார். 1989 ஜனவரி யில் திமுக அரசு வந்த சில நாட்களில் 'புதையல்’ நின்று போனது. காரணம், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி யைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை தாங்கி 'புதையல்’ வெளிவந்தது தான் என்றே பரவலாக நம்பபட்டது.
பத்திரிகையாளர் என்ற முகவரியைத் தாண்டி நாடகங்களை நடத்துபவராக இயங்கிக் கொண்டிருந்தார். ஞாநி கிட்டத் தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகங்களை நடத்தினார். 10 க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி யிருக்கிறார். இந்திய நாடகத் துறையின் தந்தையாக கருதப் படும் பாதல் சர்கார் மற்றும் மராட்டிய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர், தமிழ் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் படைப்புகளை நாடக வடிவில் கொண்டு வந்தார். தீம் திரிகிட என்ற பத்திரிகையை நடத்தினார். விகடன் குழுமத்திற்காக சில நாட்கள் ஜம்மு காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் இருந்து அங்குள்ள கள அரசியலை எழுதினார். அப்போது ஒவ்வோர் வெள்ளிக் கிழமையும், இஸ்லாமியர்கள், அவர்களுடைய தொழுகைக்குப் பிறகு நடத்தும் கூட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் பற்றி கட்டுரையை அடுத்த வாரம் எழுதப் போவதாக முன் கூட்டியே அந்த தகவலை சம்மந்தப் பட்ட பத்திரிகையில் குறிப்பிட்டார். இது சென்னையில் உள்ள ஹிந்துத்துவா அமைப்புகளிடம் கடுமையான எதிர்ப்பை கிளப்பியது. விகடன் பத்திரிகைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் ஞாநி யால் தான் எழுத நினைத்ததை எழுத முடியாமல் போனது.
தந்தை பெரியாரை பற்றி, தூர்தர்ஷன் சார்பாக ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்தார். கிட்டத் தட்ட 100 நிமிடங்கள் ஓடக் கூடிய டாக்குமெண்டரி படம் இது. மதச்சார்பின்மை என்ற கொள்கையில் இறுதி வரையில் உறுதியாக இருந்தார் ஞாநி. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை ஞாநி கடைசியாக அவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் எழுதியதில் இருந்து எளிதாக புரிந்து கொள்ளலாம்.
'’துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பிஜேபி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக எடுக்க மாட்டார். பிஜேபி யையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி பிஜேபி சங்க பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது.முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்’’.
ஞாநியின் மறைவு நிச்சயம், தமிழ் பத்திரிகை உலகத்துக்கும், சிவில் சமூகத்துக்கும் ஒரு இழப்புதான். தன்னுடைய உடலை தான் மறைந்த பிறகு மருத்துவ ஆராய்சிக்கு கொடுத்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஞாநி முறைப்படி, சட்டரீதியில் எழுதி வைத்து விட்டார். அதன்படி ஞாநி யின் பூத உடல் சென்னை அரசு பொது மருத்துவனைக்கு கொடுக்கப் பட்டு விட்டது.