வாயை மூடுங்கள்!
- கதிர்
சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதை கேள்வி கேட்கும் உரிமை எவருக்கும் இல்லை. இந்த கருத்தை நமது மதிப்புக்கு உரிய சந்துருவும் சொல்லி இருக்கிறார். ஆனாலும் இது அபத்தமான கருத்து மட்டுமல்ல.
'மக்களாகிய நாங்கள்..' என தொடங்கும் இந்திய அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் கருத்து.
மக்களை அவமதிக்கும் எந்தக் கருத்தும் சட்டப்படி செல்லத்தக்கதாக இருக்க முடியாது. பெரும்பான்மை மக்கள் மடத்தனமாக முடிவு எடுத்தால் அரசியல் சாசனம் அதை எப்படி அங்கீகரிக்க முடியும் என்பது இன்னும் திமிர்த் தனமான கேள்வி.
மக்களுக்கு சரியான முடிவு எடுக்க தெரியாது என்கிற மேதமை வாதம் உள்ளடங்கிய கருத்து அது.
அதாவது மக்கள் முட்டாள்கள்; அதனால்தான் அவர்கள் சார்பாக நாங்கள் முடிவுகள் எடுக்கிறோம் என்கிற பிரபுத்துவ நாயகத்தின் எதிரொலி.
லெட்டர் & தி ஸ்பிரிட் ஆஃப் லா என்பதன் அர்த்தம் தெரிந்த எவரும் இப்படி பேச மாட்டார்கள்.
அத்தனை பேரும் ரகசிய வாக்கெடுப்பு கேட்கும்போது அதை மீறி வேறு முடிவு எடுக்க சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
என் இஷ்டப்படி நடப்பேன். அதை எவரும் கேட்க முடியாது என்று சொல்ல இந்த நாடு ஒன்றும் அவருடைய பண்ணை வீடு அல்ல. இந்த நாட்டு மக்களும் அவருடைய எஜமானர்களின் கொத்தடிமைகள் அல்ல.
ரகசியமே வேண்டாம், எல்லாம் வெளிப்படையாக இருக்கட்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். சபை உறுப்பினர்கள் கடத்தி செல்லப்பட்டு, தனி விடுதியில் அடைக்கப்பட்டு, ஓட்டெடுப்பு நடக்கும் வரையிலும் எவரோடும் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் ரகசிய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் ஓட்டெடுப்பு மட்டும் வெளிப்படை என்பது கேலிக்குரியதாக தெரியும். அடிமைகளை போல பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்களுக்கும் சுதந்திரம் கிடைக்க வசதியாகத்தான் ரகசிய வாக்கெடுப்பு கேட்கப்பட்டது.
இதற்கு மாறாக சுப்ரீம் கோர்ட்டே ஒரு நிலை எடுத்தால்கூட அதை மக்கள் விரோத நிலைப்பாடு என்றுதான் கூற முடியும்.
கோர்ட் அவமதிப்பு என்ற ஆயுத பிரயோகம் பற்றிய அச்சமில்லை என்றால், 'முதுகெலும்பு இல்லாதவர்களின் முடிவு' என்றும் விமர்சிக்கலாம்.
ரகசிய வாக்கெடுப்பை விட வெளிப்படை வாக்கெடுப்புதான் சரியானது என்று கூற சபாநாயகருக்கே வார்த்தைகள் கிடைக்காத நிலையில், சட்ட மேதைகள் அவரது செயலை நியாயப் படுத்த சட்ட புத்தகத்தில் இருந்து வார்த்தைகளை தோண்டி எடுப்பது கடைநிலை அவலம்.
சட்டப்படி தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மக்கள் விருப்பத்துக்கு மாறாக அந்த சட்டத்தையே தங்கள் வசப்படுத்த முடியும் என்பதுதான் ஜனநாயகம் என்றால், எல்லா கடவுள்களும் சேர்ந்து வந்தாலும் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது.
தமிழ்நாடு மிகப் பெரிய தலைவர்களை, சட்ட மேதைகளை இந்த நாட்டுக்கு தந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் என்கிற மிகப்பெரிய ஜனநாயக எந்திரத்தின் ஓட்டுனராக மிகச்சிறப்பாக செயல்பட்ட மூளைகள் தமிழர்களுக்கு சொந்தமானவை.
அரசு தரும் ஓய்வூதியத்துக்காகவும், ஆசை காட்டும் ஆணைய பதவிகளுக்காகவும் அமைதி காக்காமல் உண்மையை ஊரறிய சொல்ல வேண்டியது தமிழர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் தார்மீக கடமை.
சசிகலா, தினகரன், பழனிசாமி போன்ற தனிப்பட்ட நபர்களை எள்ளி நகையாடி எழுதுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. கருவின் குற்றம் என்பதைப் போல இது நமது அமைப்பின் கோளாறு.
ஆட்களை விமர்சித்து பொழுது போக்குவதை தாண்டி, அமைப்பின் குறைபாட்டை சரிசெய்ய அரசை நிர்ப்பந்திக்க வேண்டிய நேரம் இது.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற குறுகிய கால ஆசையை தியாகம் செய்துவிட்டு ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, இளங்கோவன், திருமாவளவன், விஜயகாந்த், பொன்ரா, பன்னீர், பாண்டியராஜன், நட்ராஜ் உள்ளிட்ட அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு தமிழக நலனுக்காக குரல் எழுப்ப வேண்டிய நேரம்.
செய்வீர்களா?