சேரனின் இன உணர்வுக்கு எந்த தாசில்தார் சான்றிதழும் தேவையில்லையே...கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்
சென்னை: திருட்டு டிவி குறித்த இயக்குநர் சேரனின் ஆதங்கம் வெளிப்பட்ட முறையில் குறைகள் இருக்கலாம்; அதற்கான அவரது இன உணர்வுக்கு எந்த தாசில்தார் சான்றிதழும் தேவையில்லை என்று கவிஞரும் மூத்த பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆரூர் தமிழ்நாடன் பதிவிட்டுள்ளதாவது:
கன்னா பின்னா' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சேரன், திருட்டு வி.சி.டி.க்கள் குறித்த தன் கோபத்தை வெளிப்படுத்திய போது, அந்தத் தொழிலில் ஈடுபடும் இலங்கைத் தமிழர்கள் குறித்தும் இலங்கையைச் சேர்ந்த இணையதளங்கள் குறித்தும் தன் கண்டனத்தைத் தெரிவித்தார். அப்போது ஈழத் தமிழர்களுக்காக நாம் போராடினோமே... அதை நினைத்தால் அறுவெறுப்பாக இருக்கிறது என்றும் சொல்லிவிட்டார்.
அவரது இந்த ஆதங்கக் குரலைக் கையில் எடுத்துக்கொண்டு, இன்று பலரும் அவரைத் துரத்தித் துரத்தித் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சேரன், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய முறையில் வேண்டுமானால் குறைகள் இருக்கலாம். ஆனால் அவர் குறிப்பிடுகிற குற்றச்சாட்டு உண்மையானது.
ஒரு படத்தை வெளியிடும் முன்பாகவே, படக் குழுவினருக்கு சவால் விட்டு, அந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிடும் திமிரடித் திருட்டு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
தன் கருத்தைப் பதிவுசெய்கிறபோது சேரன் நிதானத்தைக் கடைபிடித்திருக்கவேண்டும் என்றாலும், அவரது வார்த்தைகளை, ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்குமான எதிர்ப்பாக எடுத்துக்கொள்வது, அறத்துக்கு எதிரான அத்துமீறல்.
'ஈழத் தமிழர்களில் அப்படிப்பட்டவர்களும் இருகிறார்களே. அவர்களுக்கும் சேர்த்துத்தானே போராடினோம்' என்ற கருத்திலேயே அவர் பேசியிருக்கிறார். இது எதிர்ப்பவர்களுக்கும் தெரியும். இருந்தும், அவர்கள் சேரனைத் தாக்குவது ஒரு வெற்றுப் பரபரப்பைச் சம்பாரிக்கவே.
அவர் விளக்கம் கொடுத்த பின்னரும், அவர் சட்டைக் காலரை விட மறுக்கிறார்கள்.
ஒருவரின் கருத்தை எதிர்க்கும் போது, சொன்னவர் யார்? நண்பனா? எதிரியா? என இனம் காணவேண்டும். அதன்பின்தான் அவர்களின் வார்த்தைகளில் அகழ்வாராய்ச்சி நடத்தவேண்டும்.
சேரன் நல்ல படைபாளி. தேர்ந்த படைப்புகளைக் கொடுத்தவர். ஈழப் போராட்டங்களில் அதி தீவிரமாகப் பங்கேற்றவர். உண்மையான இன உணர்வாளர். இதற்கெல்லாம் தாசில்தார் சான்றிதழ் தேவையில்லை. அப்படிப்பட்டவரின் ஆதங்கத்தில் இருக்கும் நியாயக்குரலை ஏற்காமல் அவரைத் தாக்குவது, புரிதலற்ற போக்கிரித்தனம்.
அம்மாக்க்கள், தங்கள் பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, 'ஒழுங்கா ஒக்காந்து படி. இல்லைன்னே கொன்னே போட்ருவேன்' என்று செல்லமாய்க் கண்டிப்பார்கள். இதற்கெல்லாம் அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு போடுவது சரியா?
சரியென்றால்... இவர்கள் சேரனை எதிர்ப்பதும் சரி.
இவ்வாறு ஆரூர் தமிழ்நாடன் பதிவிட்டுள்ளார்.