டிவி நிகழ்ச்சியில் ராமர் பற்றி சர்ச்சை பேச்சு: கிறிஸ்துதாஸ் காந்தி மீதான வழக்கை கைவிட கோரிக்கை
ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையின் விவரம் : தொலைக்காட்சி (தந்தி) விவாதம் ஒன்றில் முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கிறித்துதாசு காந்தி அவர்கள் கூறிய கருத்துக்காக, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அவர் தெளிவாக, "தனிப்பட்ட ஒருவர் எந்த மத நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம்; ஆனால் முதலமைச்சராகவோ பிரதமராகவோ குறிப்பிட்ட ஒரு மத நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்வது, மதச்சார்பற்ற நாட்டில் தவறானது. ஒன்று எல்லா மதத்தினரின் நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம் அல்லது அனைத்து மதநிகழ்வுகளையும் புறக்கணிக்கலாம்"என்று விளக்குகிறார்.
அதற்கு பதில்கூற வேண்டிய பா.ஜ.க. பிரமுகர் ராகவன் என்பவர், "திமுக தலைவர் கருணாநிதியிடம் போய் இதைக் கூறுங்கள்" என்க, தொடர்ந்த விவாதத்தில், "இந்த நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கையும் உண்டு; இதுதான் மதச்சார்பின்மை...அப்புறம் யாரையோ.." எனச் சொன்ன காந்தி, "ராமனை செருப்பால் அடிப்பேன் எனக் கூறவும் மதச்சார்பின்மை நாட்டில் உரிமை உண்டு; அதை எப்படி தப்புனு சொல்வீங்க; எனக்கு அதற்கு உரிமை இருக்கு.." என்ற பொருளில் பேசிக்கொண்டிருந்தபோதே, அவரின் பேச்சு தடுக்கப்பட்டது.
கடைசிவரை அதில் அவர் பேசிமுடிக்கவிடாமல் பாஜக பிரமுகர் கூச்சலிட்டபடி இருந்தார். அவரின் நியாயமான கேள்விக்கு கடைசிவரை பதிலளிக்கப்படாதது பற்றிப் பேசாமல், அவரின் ஒரு வாசகத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு, பிரச்னை ஆக்கினர். அவர் அதற்காக மன்னிப்பு கேட்ட பிறகும் விடவில்லை!
முன்னாள் கூடுதல் தலைமைச்செயலர் என்ற அனுபவத்திலும் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கான செயல்பாட்டின் மூலமான சமூக அறிவைக் கொண்டு, இரண்டு ஆண்டுகளாக தொலைக்காட்சி உரையாடல்களைப் பொருள்கொண்டவையாகச் செய்துவருகிறார். குறிப்பாக, மைய, மாநில அரசின் செயல்பாடுகள், நிர்வாகம் பற்றிய அவருடைய கருத்துகள் குறிப்பிடத்தக்கவை.
இந்த நிலையில், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையின் வரம்புக்கு உட்பட்டு ஐயா காந்தி பேசியதற்கே, அவர் மீது பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், அவரின் முகவரி, தொலைபேசி எண்ணை வெளியிட்டு, சாதிய சக்திகள்- முகம்காட்டத் திராணியற்ற கோழைகளை ஏவிவிட்டு மிரட்டுவது, காந்திக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் உளைச்சலை உண்டாக்குவது, இதன் மூலமாக பொதுசமூகத்தில் அவரைச் செயல்படவிடாமல் தடுப்பது என பாசிசத்தை அரங்கேற்றியுள்ளன.
குறிப்பாக, காந்தி அவர்களை கிறித்துவர் எனப் பொய்கூறி, சாதிய சக்திகளிடம் மதவாதத்தைத் தூண்டிவிடும் பெரும் சதியிலும் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் ஈடுபட்டுள்ளன. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இது தனியொரு காந்தி மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல; பொது சமூகத்தில் மதம் எனும் பெயரால் முன்வைக்கப்படும் அனைத்துக்கும் இதே சமூகத்தில் மாற்றுக்கருத்தை வைக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை நாம் இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறோம். எனவே, கிறித்துதாசு காந்தி அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்கை ரத்துசெய்யவேண்டும்.
சனநாயகரீதியில் நடந்த உரையாடலை, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகளின் புகாரைப் பெற்றுக்கொண்டு, ஒரு குற்றமாக எடுத்து, வழக்காகப் பதிவுசெய்த போலீசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் இனி இது போன்ற தவறுகளை உடந்தையாகக்கூட செய்வதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள் எனும் நிலை உறுதிசெய்யப்பட வேண்டும்.
தொலைக்காட்சிகளில் நடப்பாய்வுகளில் பங்கேற்கும் கருத்துரையாளர்கள் மீது இவ்வாறு சட்டரீதியிலான, சமூகவிரோத, சட்டவிரோத தாக்குதல்கள் நடத்தப்படும்போது குறிப்பிட்ட ஊடகங்கள் இதை எதிர்த்துநிற்கவேண்டும். இது, நான்காவது தூண் எனக் கூறப்படும் ஊடகங்களின் கடமை என்பதையும் அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மாற்றத்துக்கான ஊடகவியலாளர் மையம், மே பதினேழு இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பல பத்திரிகையாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.