போலி இறப்பு சான்றிதழ் வழக்கு: நிருபர் பெயர் சேர்ப்புக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம்
மதுரை: மதுரையில் போலி இறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரத்தில், புதிய தலைமுறை செய்தியாளரின் பெயரை சேர்த்ததற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக டிஜிபியை சந்தித்து பத்திரிக்கையாளர்கள் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
மதுரை மாநகராட்சியின் சார்பாக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாத்துரை பேரில் போலி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும் 28.09.2013 அன்று ஆதாரத்துடன் செய்தி வெளியானது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் மதுரை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த ஜீவன் ரமேஷ், பத்மநாபன், பரங்கிரி நாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்தது.
இந்நிலையில் இந்த செய்தியை சேகரித்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர் ராமானுஜம் தன்னிடம் பணம் கொடுத்து சான்றிதழை வாங்கச் சொன்னதாக கைது செய்யப்பட்ட ஜீவன் ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக, மதுரை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை சார்பாக 03.10.2013ல் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் போலீசார் செய்தியாளர் ராமானுஜத்தையும், சேர்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை பொறுத்தவரை எந்த ஒரு தொலைக்காட்சியோ, செய்தித்தாளோ தனிப்பட்ட முறையில் செய்தி வெளியிடவில்லை. போலி சான்றிதழ் தரப்பட்டது தொடர்பான தகவல் வெளியான உடன் அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் இந்த செய்தி வெளியிடப்பட்டது.
ஒரு வேளை மதுரை காவல்துறை கூறுவது போல ராமானுஜம் பணம் கொடுத்து இந்த சான்றிதழை வாங்கி இருந்தால் அந்த செய்தி முதலில் ராமானுஜம் பணியாற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்தான் வெளியிடப்பட்டிருக்கும், ஆனால் அவ்வாறு புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்படவில்லை.
பொதுவாக அரசு நிறுவனங்களில் பணம் கொடுக்கும் பட்சத்தில் இதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது என்ற தகவல் எந்த ஒரு செய்தியாளருக்கும் தெரியவரும் பட்சத்தில் இந்த தகவலை மக்களுக்கும், அரசின் கவனத்திற்கும் ஆதாரபூர்வமாக கொண்டு செல்லும் வகையில் ஒரு செய்தியாளரே அது போன்றதொரு சான்றிதழை பணம் கொடுத்து பெற்றுக்கூட ஆதாரத்துடன் செய்தி வெளியிடுவது நடைமுறையில் உள்ள வழக்கம்.
சுதந்திர இந்தியாவில் பல்வேறு செய்தி ஊடகங்கள் அரசு மற்றும் அரசியல்வாதிகளினுடைய ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான பல்வேறு முன்னுதாரணங்கள் உள்ளன. ஒருவேளை காவல்துறை கூறுவது போல அந்த செய்தியாளர் பணம் கொடுத்து பெற்ற அதுபோன்றதொரு சான்றிதழை தன்னுடைய சொந்த நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளாமலும், அந்த போலி சான்றிதழை கொண்டு எந்த வித ஆதாயமும் அடையாமலும் அந்த சான்றிதழை தான் வெளிக்கொண்டு வந்த அரசு அலுவலர்களின் ஊழல் நடைமுறைக்கு ஒரு அத்தாட்சியாகவே பயன்படுத்தும் பட்சத்தில் அது எந்த வகையிலும் குற்ற நடவடிக்கையாக கருத முடியாது.
உண்மையில் தனிப்பட்ட இருவரின் விரோதத்தின் காரணமாகத்தான் இத்தகைய செயல்கள் நடந்திருப்பதாக தன்னுடைய பத்திரிகை செய்திகளிலே தெரிவித்திருக்கும் காவல்துறை தற்போது மாநகராட்சியில் நடந்த அவலங்களை மறைபதற்காக பத்திரிகையாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தி பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை மிரட்டிவருகிறது.. மேலும், இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது, ஆகவே எந்த காரணத்திற்காகவும் இந்த வழக்கில் செய்தியாளர் ராமானுஜத்தை சேர்க்கக்கூடாது என வலியுறுத்துகின்றோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
டிஜிபி கண்டனம்
அப்போது பத்திரிகையாளரிடம் பேசிய காவல்துறை இயக்குநர் ராமானுஜம், இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரை அழைத்து பேசியதாகவும், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தாகவும் கூறினார். இதுபோன்று செய்திகளை வெளியிடும்போது, கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
நெல்லையில் ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, காவல்துறையின் இந்த செயல் பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, நெல்லையில் பத்திரிகையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்தி வெளியிட்ட செய்தியாளரையே வழக்கில் சேர்க்கும் காவல்துறை முயற்சி ஒரு தவறான முன்னுதாரணம் என்றும் இதனை தவிர்க்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.