எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை தேவை... தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் - செய்தியாளர்கள் வலியுறுத்தல்
செய்தியாளர்களையும், செய்திவாசிப்பாளர்களையும் இழிவாக கருத்து பதிவிட்ட எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Recommended Video
சென்னை: பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன்பு செய்தியாளர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் செய்தியாளர்களைப் பற்றி கேவலமான ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் அதனை நீக்கிவிட்டார்.
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் எச். ராஜாவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
இது குறித்து கருத்து கூறிய தமிழிசை சவுந்தரராஜன், நான் சொல்வதுதான் பாரதிய ஜனதா கட்சியின் கருத்து என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எல்லோருடைய போராட்டத்திலும் சுயநலம்தான் ஒளிந்துள்ளது, பாஜக பொதுநலத்தோடு பணியாற்றுகிறது என்றும் கூறினார். இதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தி நகரில் செய்தியாளர்கள் ஆர்பாட்டம்
இதனிடையே பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி இன்று தி. நகரில் உள்ள பாஜக தமிழ்நாடு தலைமையகம் கமலாலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை தேவை
போராட்டம், சாலைமறியலில் ஈடுபட்டால் கைது செய்யவும் தயார் நிலையில் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள், பெண் செய்தியாளர்கள், செய்திவாசிப்பாளர்களை வெளிப்படையாக இழிவுபடுத்தி எழுதிய எஸ்.வி. சேகர், எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
செய்தியாளர்கள் கொந்தளிப்பு
எஸ்.வி. சேகர், எச். ராஜாவிற்கு எதிராக முழக்கமிட்ட செய்தியாளர்கள், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். தெரியாமல் போட்ட பதிவு என்று எஸ்.வி. சேகர் கூறியதை ஏற்க முடியாது. எச். ராஜா போல எஸ்.வி. சேகரும் கதை விட வேண்டாம் என்று கூறினர்.
உடனடி நடவடிக்கை தேவை
எஸ்.வி சேகரின் உருவப்படத்தை கிழித்து போட்டு தீயிட்டனர். பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் முன்பாகவே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஜக தலைமை உடனடியாக எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பிரபலமாகவேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துக்களை பதிவிடுகின்றனர். எதையும் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டு விடலாம் என்று நினைக்கின்றனர். இனிமேல் இதுபோல பேசவே கூடாது அதற்காகவே இந்த போராட்டம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கூறினர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்:
எஸ் வி சேகரைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தலைவர் சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை : பத்திரிகையாளர்களைப் பற்றிய எஸ்.வி.சேகர் அவர்களின் பதிவு அவருடைய தரத்தையும் மதிப்பையும் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களின் மனதையும் பாதித்துள்ளது. குறிப்பாக அவருடைய பதிவில் பத்திரிகைப் பணியில் இருக்கும் பெண்களைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பதிவு
மானமுள்ள பத்திரிகையாளர்கள் இனி எஸ்.வி.சேகரின் ஒட்டு மொத்த செய்திகளையும் புறக்கணித்து பத்திரிகையாளர்களின் தன்மானத்தை காக்க வேண்டும். சிலர் இதற்கு பதில் சொல்லும் விதமாக அவருடைய குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண்களை குறிப்பிட்டு சில பதிவுகளை போட்டுள்ளனர். அதை நாம் தவிர்க்க வேண்டும். அவருடைய இந்த கேவலமான பதிவிற்காக நாமும் தரம் கெட்டு அவரைப்போல பதில் சொல்லி நம்முடைய தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். நம்முடைய எதிர்ப்புக் குரல் அனைத்து பெண்களுக்காகவும் தான். அதில் பா.ஜ.க பொருப்பில் உள்ள பெண்கள் மட்டுமின்றி எஸ்.வி.சேகரின் குடும்ப பெண் உறுப்பினர்கள் வரையில் அடங்கும்.
பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
பெண் பத்திரிகையாளர்களை தரம் கெட்டு விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு டி.யூ.ஜே சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவரது கருத்து பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, பணிக்கு செல்லும் அத்தனை பெண்களையும் இழிவு படுத்துவது போல் ஆகும். இந்த செயலை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் வன்மையாக கண்டிப்பதுடன், பெண்களை இழிவுபடுத்திய எஸ்வி சேகர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.