பாஜகவிடம் பாரிவேந்தர் கேட்டுள்ள 2 தொகுதிகள் இதுதான்...!
சேலம்: பாஜகவிடம் தாங்கள் இரு தொகுதிகள் கேட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்தான் அவை என்றும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த இரு தொகுதிகளையும் ஏற்கனவே பாமக உள்ளிட்ட வேறு சில கட்சிகளும் கேட்டு வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.
ஒருவேளை தேமுதிக கூட்டணிக்கு வந்தால் கள்ளக்குறிச்சியை கண்டிப்பாக கேட்கும் என்பதால் இந்தத் தொகுதி பாரிவேந்தருக்குக் கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த திருமண விழாவுக்கு வந்திருந்த பாரிவேந்தர் அங்கு பேசினார். அதிலிருந்து...
நான் குஜராத்துக்குச் சென்றேன்
நான் குஜராத் மாநிலத்திற்கு சென்றேன். அங்கு டாஸ்மாக் கடை இல்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலைகள் மிக அருமையாக உள்ளன. அங்கு இலவசங்கள் எதுவும் இல்லை.
மோடி நல்லவர்- நாணயமானவர்
3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி மிகவும் நல்லவர். நாணயமானவர். ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் தந்து தொடர்ந்து முதல்வராக உள்ளார்.
60,000 பேருக்கு கல்வி
நான் பல கல்வி நிறுவனங்களை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவி ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறேன்.
மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்
இதோடு போதும் என்று நின்று விடாமல் நமது மக்களுக்கு ஏதாவது நல்லது நம்மால் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியை ஆரம்பித்தேன்.
2 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்
இந்த தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை பா.ஜ.கவிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.