மதுரை என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி விக்னேஷ் மது ஆய்வு
மதுரையில் என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி விக்னேஷ் மது ஆய்வு மேற்கொண்டார்
மதுரை: மதுரையில் என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி விக்னேஷ் மது ஆய்வு செய்தார். ரவுடிகள் பெற்றோரிடம் விசாரணை முடிந்த நிலையில் என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சென்ற போலீசார் ரவுடிகளை சரண் அடையுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரவுடிகள் போலீசாரை தாக்க முயற்சித்தனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரவுடிகள் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இருவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. என்கவுன்டர் நடந்த இடத்தில் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட 2 பேரின் உடல்களையும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார். அவரது அறிக்கைக்குப் பிறகு இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்கவுண்டர் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் இருந்து துப்பாக்கிகளை விசாரணைக்காக பறிமுதல் செய்தனர்.
என்கவுண்டர் நடந்த இடத்தில், துப்பாக்கி குண்டு இருந்த காலி உறைகளையும் கைப்பற்றினர்.மேலும், கொல்லப்பட்ட முத்து இருளாண்டி மற்றும் சகுனி ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் அரிவாளும் அலங்காநல்லூர் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், என்கவுண்டர் குறித்து டி.ஜி.பி.க்கு மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் அறிக்கை அனுப்பியுள்ளார். இதேபோல் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மற்றும் மனித உரிமை ஆணையத்திற்றும் அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று மாலை என்கவுண்டர் நடந்த சிக்கந்தர் சாவடி பகுதியில் நீதிபதி விக்னேஷ் மது ஆய்வு மேற்கொண்டார்.