உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத பெண் ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வசந்தி என்பவர் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் வசந்தியை வீட்டு வேலைகளை செய்யுமாறு சார்பு நீதிபதி செல்வம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், துணிகைளை துவைக்க வசந்தி மறுத்தாக கூறப்படுகிறது.
இதனால் வசந்தியிடம் விளக்கம் கேட்டு நீதிபதி செல்வம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அந்த பெண் ஊழியர் விளக்கம் கொடுத்து மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து வசந்தி கூறுகையில், தனக்கு மெமோ கொடுக்கப்பட்டது உண்மை என்றும், மேலும் இனி நீதிபதி வீட்டில் அனைத்து வேலைகளும் செய்வேன் என்று தன்னிடம் எழுதி வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.