தங்கச்சிமடத்தில் ஆயுத குவியலை ஆய்வு செய்த நீதிபதி- ஆளில்லாத இடத்தில் அழிக்க முடிவு
தங்கச்சிமடத்தில் குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கிடைத்துள்ளதால் அங்கு ராமநாதபுரம் நீதிபதி பாலகுமாரன் பார்வையிட்டார்.
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் ஒரு வீட்டின் பின்புறம் கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு ஒரு பெட்டி இருந்ததை மீனவர் எடிசன் பார்த்தார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
அப்போது ஏராளமான பெட்டிகளில் தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், கண்ணி வெடி , துப்பாக்கிகள் என ஏராளமானவை கண்டெடுக்கப்பட்டன. 10,821 தோட்டா மற்றும் வெடிகுண்டுகள் கிடைத்தன.
இதை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு ராமநாதபுரம் நீதிபதி பாலகுமாரன் வந்தார். அவர் அந்த குண்டுகளை பார்வையிட்டார்.
அப்போது தடயவியல் துறை அதிகாரிகள் இருந்தனர். இந்த குண்டுகள் எப்போது மண்ணில் புகைக்கப்பட்டன, எத்தனை நாட்கள் மண்ணில் கிடக்கின்றன, இதன் தன்மை ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படும். பின்னர் ஆள் இல்லா இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும்.