நீதி துறை மீது மக்களின் நம்பிக்கை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு... நீதிபதி வேல்முருகன்
நீதித் துறை மீது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு: நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காகவே தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக செங்கல்பட்டு மகளிர் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் 6 வயது குழந்தையை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுகாரரான தஷ்வந்த் கைது செய்யப்பட்டான். அவன் போலீஸார் புழல் சிறையில் அடைத்திருந்தனர்.
ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி வேல்முருகன் என்ன தீர்ப்பு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை என்று அறிவித்தவுடன் ஹாசினியின் தந்தை மகளின் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார். போலீஸார் நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
ஹாசினியின் தந்தையும் இத்தகைய உச்சபட்ச தண்டனை வழங்கியதற்கு நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அவர் மட்டுமல்ல முகம் தெரியாத எவ்வளவோ பேர் டிவியை பார்த்துக் கொண்டு நீதிபதியை பாராட்டிய வண்ணம் இருந்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து நீதிபதி வேல்முருகன் கூறுகையில் மக்களுக்கு நம்பிக்கையை காப்பாற்றவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை காப்பதற்கே அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது.
இல்லாவிட்டால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய்விடும் என்றார் வேல்முருகன்.