ஏன்... லுங்கி, கழுத்தில் சங்கிலி கட்டிட்டு வரவேண்டியதுதானே?- போலீசுக்கு நீதிபதிகள் 'பரேடு'!
சென்னை: இன்று நடந்த வேந்தர் மூவீஸ் மதன் வழக்கு விசாரணையில் நீதிமன்றத்துக்கு சீருடையில் வராத போலீஸ் அதிகாரிகளைக் காய்ச்சி எடுத்துவிட்டனர் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர்.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த போலீஸ் அதிகாரிகள் சீருடை அணியாமல் வந்திருந்தனர்.
இதைப் பார்த்த நீதிபதிகள், "திருமண விழாவில் மணமகனாக செல்லும்போது பட்டு வேட்டி, சட்டைதான் அணிந்து செல்லவேண்டும். லுங்கி அணிந்து செல்வீர்களா? உயர் நீதிமன்றத்துக்கு வரும்போது முழுமையான சீருடையில் இருக்கவேண்டும். தற்போது 'மப்டியில்' வந்ததற்கு, லுங்கி கட்டிக் கொண்டு வரவேண்டியதுதானே?" என்றனர் கோபத்துடன்.
நீதிமன்ற அறையில் சில போலீஸ் அதிகாரிகள் மட்டும் முழுமையான சீருடையில் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்து, 'நீங்கள் மட்டும் ஏன் முழு சீருடையில் வரவேண்டும். லுங்கி கட்டிக் கொள்ளுங்கள். கழுத்தில் கயிறு, சங்கிலி எல்லாம் கட்டிக் கொண்டு வரவேண்டியதுதானே?" என்று சீற, முகத்தைத் தொங்கப் போட்டனர் காவல் அதிகாரிகள்.