ஜெ. மரணத்தை விசாரிக்க ஆணையம்.. இது ஓர் அரசியல் சித்து விளையாட்டு.. ராமதாஸ் அதிரடி
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்பது அரசியல் சித்து விளையாட்டு என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், அவர் வாழ்ந்த போயர்ஸ் கார்டன் வீடு அரசுடைமையாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி இணைவதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனினும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், மதுரை மேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று தினகரன் பேசியதால்தான் முதல்வர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரண மர்மம் குறித்த விசாரணை ஆணையம். இது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம்; இதனால் தான் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை
— Dr S RAMADOSS (@drramadoss) August 17, 2017
இந்நிலையில், இந்த அறிவிப்பு குறித்து பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஜெயலலிதா மரண மர்மம் குறித்த விசாரணை ஆணையம். இது அரசியல் சித்து விளையாட்டின் ஓர் அங்கம்; இதனால் தான் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.