மாடியில் இருந்து மெத்தையை கீழே போட்டு உயிர் தப்பினோம் - வடபழனி தீ விபத்தில் சிக்கியவர்கள் திகில்
வடபழனியில் அபார்ட்மென்டில் தீ விபத்து ஏற்பட்ட போது, அதிகாலை நேரத்தில் மெத்தையை கீழே போட்டு பலரும் உயிர் தப்பியுள்ளனர்.
சென்னை: வடபழனியில் நேற்று அதிகாலை நேர்ந்த தீ விபத்தின்போது உயிர் பயத்தில் பலர் ஜன்னல் வழியே மெத்தையை கீழே போட்டு அதில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பாதிப்பில் இருந்து இன்னமும் பலர் மீளவில்லை. ஒரு வித அச்சத்துடனேயே தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவில் தெற்கு பெருமாள் கோவில் தெருவில், நிதி நிறுவன அதிபர் விஜயகுமாருக்கு சொந்தமான நான்கு தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலையில் குடியிருப்பு வளாகத்தில் வாகன நிறுத்தம் அமைந்துள்ள இடத்தில் உள்ள மின்சார பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் சிக்கி, கீழ்தளத்தில் குடியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மீனாட்சி, செல்வி, சஞ்சய் மற்றும் சந்தியா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலை விபத்து
அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் உறக்கத்தில் இருந்த பலரும் சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இந்த திகில் சம்பவத்தில் இருந்து பலரும் மீண்டு வரவில்லை. தீ விபத்தில் உயிர் தப்பிய கார்த்திக் என்பவர் கூறும்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.
மாடியில் இருந்து குதித்தேன்
அப்போது, எனது அறைக்குள் திடீரென அதிக புகை வந்தது. வெளியே அனைவரும் கூச்சலிட்டவாறு ஓடுவதை அறிந்தேன். நான் 3வது தளத்திலிருந்து 2வது தளத்துக்கு வந்து அங்கிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினேன். இதனால், எனக்கு காயம் ஏற்பட்டது என்றார்.
தேவிகாவின் அனுபவமோ திகிலாக இருக்கிறது. இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறேன். எங்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது ஒருவர் சிறிய மெத்தையை ஜன்னல் வழியாக கீழே தூக்கிப்போட்டு அதன் மீது குதித்து உயிர் தப்பினார்.
தீயணைப்பு வீரர்கள் மீட்பு
அதேபோல் மேலும் பலர் கீழே குதித்து உயிர் தப்பினர். எனக்கு பயமாக இருந்ததால் கதறி அழுதேன். அப்போது தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் என்னை மீட்டனர் என்றார். வடபழனி குடியிருப்பில் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிர் தப்பியது அதிசயம்
முதல் தளத்தில் வசிக்கும் சிவா இன்னமும் பதற்றம் மாறாமல் இருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பதற்காக இங்கு தங்கி உள்ளேன். அதிகாலை நல்ல தூக்கத்தில் இருந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அதன்பிறகு தான் விபத்து குறித்து தெரிந்து கொண்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்து மாடியில் இருந்தவர்களிடம் உதவி கேட்டேன். ஆனால் அவர்களால் உதவி செய்ய முடியவில்லை. பதறிஅடித்து என் நண்பர்களுக்கு செல்போனில் அழைத்தேன். செல்போனும் ஒரு கட்டத்தில் வேலை செய்யவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். என் நண்பரும் பின்வாசல் வழியாக வந்து என்னை மீட்டு சென்றார் என்றார்.
கால் முறிந்த சிறுவன்
தனது 10வயது மகனை காப்பற்ற ஜான் கிறிஸ்டோ என்பவர் மகன் ஜெய கிறிஸ்டோவை 2வது தளத்தில் இருந்து தூக்கி வீசினார். மெத்தை மேல் விழாமல் தள்ளி விழுந்ததால் ஜெய கிறிஸ்டோவின் கால் முறிந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல், பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தப்பினர்.
அங்கீகாரம் இல்லாத கட்டடம்
இந்த குடியிருப்பு முறையான அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்கீகாரம் இல்லாத 5 மாடி கட்டடத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் உயிரையும் உடமைகளையும் இழந்து நிற்கின்றனர் என்பதுதான் சோகம்.