மெரினாவில் கஞ்சா விற்பனை செய்த ‘கோ-2’ பட நடிகர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: சென்னை மெரினாவில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலுக்குத் தலைவனாக செயல்பட்ட, துணை நடிகர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறப்பதாக போலீசாருக்குப் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மெரினா இன்ஸ்பெக்டர் அரிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது மெரினா சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் பாண்டியன், மாறன், யூசுப், பாசில், தனம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த மூர்த்தி (எ) கஞ்சா கிருஷ்ணமூர்த்தியை (30) தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக சிவராஜபுரத்துக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் வீட்டருகே போலீசார் மாறுவேடத்தில் பதுங்கியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தியை அவர்கள் கைது செய்தனர். மேலும், அவர் ஓட்டி வந்த விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளையும், அவர் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில்,
என்னுடைய தந்தை முருகன் மெரினாவில் கஞ்சா தொழிலில் கொடிகட்டி பறந்தார். அவர் இறந்துவிட்டார். அவருக்கு பிறகு கஞ்சா தொழிலை நானும், எனது சகோதரி வாசுகியும் செய்து வந்தோம்.
தேனி, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை பஸ் மூலம் கோயம்பேடுக்கு எடுத்து வருவோம். பின்னர் அதனை பிரித்து சினிமாவில் பணியாற்றும் துணை நடிகர்கள், தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வோம்.
மெரினா கடற்கரைக்கு வரும் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்வோம்.
தற்போது நான் ‘கோ-2' என்ற தமிழ் படத்தில் துணை நடிகராக நடித்துள்ளேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்து தலைமறைவாக இருந்தேன். குடும்பத்தை பார்க்கும் ஆசையில் வந்தபோது சிக்கிவிட்டேன்' என அவர் தெரிவித்தார்.
கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளி லலிதா என்ற பெண் கஞ்சா வியாபாரியும் நேற்றுமுன்தினம் போலீசாரிடம் சிக்கினார். அவரிடமிருந்து 20 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களும், ரூ.5 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியும், லலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி வாசுகி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.