கேன்சரை உருவாக்கும் காலாவதியான “ஜங்க் புட்” – மருத்துவர்கள் அறிவிப்பு
சென்னை : காலாவதியான திண்பண்டங்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு கேன்சர் பாதிப்பு வரும் என்று புற்றுநோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான மருந்துகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
பொதுமக்கள் புகாரை தொடர்ந்து மருத்துவ துறையினர் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான காலாவதி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
உயிருக்கு உலை:
இதுபோன்ற மருந்துகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் காலாவதி மருந்துகள் விற்பனை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் தற்போது காலாவதி திண்பண்டங்கள் விற்பனை மூலம் குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கும் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
குழந்தைகளின் விருப்பம்:
தமிழகத்தில் உள்ள சிறிய கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட்டுகள் வரை தாராளமாக விற்பனைக்கு கிடைக்கும் பொருட்களில் குழந்தைகள் விரும்பும் சாக்லெட், சிப்ஸ், மிட்டாய் மற்றும் பிஸ்கெட் வகைகள் உள்ளன.
குவியும் பண்டங்கள்:
தனியார் விற்பனை நிறுவனங்கள் தொழில் போட்டி காரணமாக இந்த நொறுக்குதீனிகளை கடைகளில் அதிகளவில் குவித்து விடுகின்றன. அப்படி குவிக்கும் பொருட்கள் எல்லாம் உடனடியாக விற்றுவிடுவதில்லை.
காலவதி ”காலன்”:
இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்த வேண்டிய இந்த நொறுக்கு தீனிகள் காலாவதியான பின்னரும் மாதக்கணக்கில் கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை வாங்கி சாப்பிடும் குழந்தைகள் வாந்தி, பேதி மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
உயிர் போகும் அபாயம்:
உரிய காலத்திற்குள் இதற்கு சிகிச்சை அளிக்கவில்லையெனில் அக்குழந்தைகள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் காலாவதியான மற்றும் தரக்கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்படாத நொறுக்கு தீனிகளை குழந்தைகள் சாப்பிடும்போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
புற்று நோய் பாதிப்பு:
இதுகுறித்து அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் கூறியபோது, "குழந்தைகள் புற்று நோயினால் பாதிக்கப்படுவதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று மரபு வழியாக தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா வழிகளில் பாதிக்கப்படுவது. மற்றொன்று அதிக அளவு எண்ணெய் கலந்த உணவு கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படுகிறது.
சூடுபடுத்திய உணவுகள்:
காலாவதியான திண்பண்டங்களை சாப்பிடுவது , அதிக நேரம் வேகவைத்த உணவு, ஒரு நாள் சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி 2 நாட்களுக்கு சாப்பிடுவது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் புற்றுநோய் தாக்க அதிக வாய்ப்புள்ளது.
உணவில் கவனம் தேவை:
இதுபோன்ற திண்பண்டங்களை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.புற்று நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டுப்பிடித்து விட்டால் முழுமையாக குணப்படுத்திவிடலாம். முற்றிவிட்டால் புற்றுநோயை குணப்படுத்துவது மிக கடினம்" இவ்வாறு அவர்கள் கூறினர்.