'ஆல் இன் ஆலாக' இருந்த ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நெருக்கடி... நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் சம்மன்!
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளது.
Recommended Video
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி கமிஷன் நவம்பர் மாதத்தில் விசாரணையை தொடங்கிய நிலையில், காலக்கெடு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில் இப்போது தான் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை திமுக மருத்துவர் சரவணன், டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக் மற்றும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மீண்டும் சம்மன்
தமிழக தலைமை செயலாளராகவும், தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய ஷீலா பாலகிருஷ்ணனும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த சம்பவங்கள் குறித்து கடந்த 20ம் தேதி ஆறுமுகசாமி கமிஷன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஷீலாவின் கட்டுப்பாட்டில் அரசு
ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்த 3 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்தில் ஆல் இன் ஆலாக வலம் வந்தவர் தான் இந்த ஷீலா பாலகிருஷ்ணன். அரசின் செயல்பாடுகள் தொடர்பான கோப்புகளை பிரதி எடுத்து அதை முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் போயஸ் இல்ல வீட்டிற்கு அனுப்பி அவர் சரிபார்த்த பின்னர் அவற்றை அரசுக் கோப்புகளில் ஏற்றும் செயல்களை ஷீலா தான் கவனித்து வந்துள்ளார்.
அதிகாரிகள் கூட்டம் நடந்ததா?
இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அனைத்து விவரங்களும் இவருக்கும் தெரியும் என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. இதே போன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கூட்டம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திலும் ஷீலாபாலகிருஷ்ணன் பங்கேற்றதாக சொல்லப்பட்டது.
முக்கியமாக கருதப்படுகிறது
எனவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரும், பின்னரும் நடந்த அனைத்து விவகாரங்களும் ஷீலா பாலகிருஷ்ணனுக்குத் தெரியும் என்பதாலேயே அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது ஆறுமுகசாமி கமிஷன் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஐஏஎஸ் அதிகாரியான இவரின் விளக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.