மெயின் சீனுக்குள் நுழையும் விசாரணைக் கமிஷன்... ஜெ. வீட்டு சமையல்காரர், டிரைவருக்கு சம்மன்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் வேதா நிலையத்தில் வேலை செய்து வந்த சமையல்காரர் உள்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், வேதா நிலையத்தில் பணியாற்றி வந்த சமையல்காரர், டிரைவர் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தலைமையில் விசாரணை நடத்த அரசு ஆணையிட்டது. இதன்படி ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அப்பலோ நிர்வாகத்தின் விளக்கம், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக், மாதவன் மற்றும் இளவரசியின் மகன் விவேக், மகள் இளவரசி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடந்துள்ளது. ஜெயலலிதாவுடனேயே கடைசி வரை இருந்த சசிகலாவிற்கு நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
சமையல்காரருக்கு சம்மன்
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் சமையல்காரராக இருந்த ராஜம்மாள், டிரைவர் ஐயப்பன் மற்றும் முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மனை ஏற்று இவர்கள் விசாரணைக்கு வந்தால் பல மர்மங்கள் வெளிவரலாம்.
செப்டம்பர் 22ல் நடந்தது என்ன?
ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர், சசிகலாவுக்கும் ஜெயலலிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக அப்போதே செய்திகள் வந்தன. மேலும் காய்ச்சலோடு இருந்த ஜெயலலிதாவை சசிகலா கீழே பிடித்து தள்ளியதாகவும், இதனால் ஜெயலலிதா கீழே விழுந்த போது சமையல்கார ராஜம்மாள் ஓடி வந்து தூக்க முயற்சித்ததாகவும் கூறப்பட்டது.
விரட்டி விட்ட சசிகலா
ஆனால் சசிகலா ராஜம்மாளை மிரட்டி தூக்கிவிடக் கூடாது என்று சொன்னதாகவும், சில மணி நேரங்களுக்குப் பிறகே ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து அதன் பின்னர் ஜெயலலிதாவை அறைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்றும் ஒரு செய்தி பரவலாக இருக்கிறது. உண்மையிலேயே ஜெயலலிதாவிற்கு உடல்நிலை எப்போதில் இருந்து சரியில்லை வேதா நிலையத்தில் செப்டம்பர் 22, 2017ல் நடந்தது என்ன என்று ராஜம்மாள் கூறுவதிலாவது ஏதாவது தடயம் விசாரணக் கமிஷனுக்கு கிடைக்குமா.
டிரைவரிடம் கேட்க வேண்டியவை
இதே போன்று ஜெயலலிதாவின் டிரைவர் ஐயப்பனிடமும் நடத்தும் விசாரணையின் போது ஆம்புலன்ஸ் ஏன் முன்கூட்டியே வரவழைக்கப்படவில்லை. ஜெயலலிதா எத்தனை நாட்களாக வெளியே செல்லவில்லை உள்ளிட்டவற்றை விசாரணைக் கமிஷன் கேட்க வேண்டும்.