ஜல்லிக்கட்டு வழக்கில் இருந்து நீதிபதி பானுமதி மீண்டும் விலகுவாரா?
ஜல்லிக்கட்டுக்கு முதன் முதலில் தடை விதித்ததால் கடந்த ஆண்டு இது தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி பானுமதி விலகினார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு முதன் முதலாக தடை விதித்த நீதிபதி பானுமதியை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமையன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது. கடந்த முறை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில் இருந்து விலகியது போல நீதிபதி பானுமதி இம்முறையும் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகின. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டன.
இந்த நிலையில் 2006-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் முனுசாமி தேவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். அதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டில் பலியான ஒருவரின் தந்தை நட்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.