ராம்குமார் வழக்கை மூட வேண்டும் என்று அவசரப்பட்டது போலத் தெரிகிறது.. நீதிபதி சந்துரு
சென்னை: வழக்கை சீக்கிரமாக முடிக்கும் நோக்கமே ராம்குமாரின் மரணத்தில் தெரிகிறது. இதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த மரணத்திற்கு சிறை அதிகாரிகளே பொறுப்பு என்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
ராம்குமார் மரணம் குறித்து நீதிபதி சந்துரு கூறுகையில் இதில் பல சந்தேகங்கள் உள்ளன. சிறை அதிகாரிகள்தான் கைதிகளின் மரணத்திற்குப் பொறுப்பாவார்கள். அவர்கள்தான் இதற்கு விளக்கம் தர வேண்டும். சிறையில் பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன. அப்படி இருக்கும் போது எப்படி இப்படி ஒரு மரணம் சம்பவிக்க முடியும்.
பல மர்மங்கள், சந்தேகங்கள் இதில் உள்ளன. இதற்கு சிறை அதிகாரிகள்தான் விளக்கம் தர முடியும். சிறைக்கு வரும் முன்பு பெரும்பாலும் அனைவரும் நலமாகவே உள்ளனர். ஆனால் சிறைக்கு வந்ததும் அவர்கள் மரணமடையும் அளவுக்குப் போகிறார்கள். அது எப்படி சிறைக்குள் வந்ததுமே உடல் நலம் சரியில்லாமல் போய் விடும்.
வயர்கள் எல்லாம் வெளியில் தெரியும்படி எந்த சிறையிலும் இருக்காது. சுவர்களுக்குள் பதிக்கப்பட்ட நிலையில்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது வயரை எப்படி எடுத்துகர் கடிக்க முடியும். திட்டமிட்டு செய்தது போல தெரிகிறது. வழக்கை சீக்கிரமே முடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக தெரிகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார் நீதிபதி சந்துரு.